Showing posts with label பகிர்வு. Show all posts
Showing posts with label பகிர்வு. Show all posts

Wednesday, February 23, 2011

முதல்வரின் உண்மை


இலேசாக தலைவலி..... அதனால் என்ன என்று நான் இருந்திருக்கலாம். இல்லை தைலம் தடவி சாய்ந்திருக்கலாம். இரண்டும் இல்லாமல் இப்படி ஆகிவிட்டதற்கு காரணமும் நானே!

என்ன நடந்தது?


தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் பேச்சை படிக்க நேர்ந்தது. சமீபத்தில் நடைபெற்ற ப.ஜீவானந்தம் அவர்களின் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு பேசினார்.

'அரசியல் நாகரிகத்தை தமிழ் நாட்டைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் பெற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டிலே தான் அந்த உறவு மனப்பான்மை, அந்த நேச மனப்பான்மை, அந்த நாகரிகம் இல்லை. .....இன்றைக்கு என்னவோ, அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை - எந்தக் கடையிலே விற்கிறது என்று கேட்கின்ற அளவுக்கு - விசாரிக்கின்ற அளவுக்கு நாகரிகம் நலிந்து போய்விட்டது. நசிந்து போய் விட்டது'.
(முரசொலி 8.2.2011) http://bit.ly/dOR82Z

முதல்வர் கூறியது முற்றிலும் உண்மைதான். தமிழகத்தில் அரசியல் நாகரிகம் சற்றும் இல்லாமல் போய்விட்டதோ என சிந்தித்து, ஏற்றுக் கொண்டுவிட வேண்டியதுதான் என பெருமூச்சு விட்டேன்.

ஆனாலும் பாருங்கள் இன்னொன்றும் என் கண்ணில் பட்டது.

அது, சுப்ரமணியம் சாமிக்கு, வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டது தொடர்பாக கழக துணைப் பொதுச் செயலாளர், தமிழக சட்ட அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள பதில். பதிலின் ஒரு பகுதியில் இப்படிக் குறிப்பிட்டுள்ளர். அதுவும் அதே தேதியில்....

'சுப்பிரமணியம் சுவாமி என்பவர் யார், அவருடைய குணாதிசயங்கள் என்ன என்பதை இந்திய நாட்டு மக்கள் நன்கறிவார்கள். தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் எல்லாம் தான் ஏதோ மெத்தப் படித்த "மேதாவி" என்பதைப் போலக் காட்டிக் கொள்பவர். அரசியலில் கூடு விட்டு கூடு பாயும் பேர்வழி. நாடு விட்டு நாடு போய் நஞ்சை கொட்டி விட்டு வரும் ஜென்மம். ஒரு கட்சியில் கூட நிலையாக நிற்காத அரசியல் நாடோடி. ஆதாயம் கிடைக்கிறது என்றால், யாருக்கும் பல்லக்கு தூக்கும் வாடகை மனிதர். விளம்பரம் கிடைக்கும் என்றால் மனிதக் கழிவையும் கூட தொடத் துணியும் அற்ப பேர்வழி. பொதுவாகச் சொல்லப் போனால் இந்தியாவில் ஒரு முதிர்ந்த அரசியல் ஜோக்கர் என்று கூறலாம். ஆனால் அவருக்கு தான் ஒரு அறிவாளி, மேதை என்கிற நினைப்பு. அதனால் எதிலும் மூக்கை நுழைக்கலாம் என்கின்ற அரிப்பு.

அந்த அரிப்பின் விளைவுதான்.....' இப்படி நீள்கிறது. http://bit.ly/ebogFS


இப்போது சொல்லுங்கள். தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை என்று கருணாநிதி அவர்கள் கூறியது எப்பேர்பட்ட உண்மை.

துரைமுருகனுக்கு அவரின் தலைவர் சொன்னது தெரியாது போலிருக்கிறது. இல்லை என்றால் தைரியமாக அதே தேதியில் அந்த அறிக்கையை வெளியிடுவாரோ. இல்லையில்லை.... இருக்காது. பின் ஒரு மந்திரிக்கு, முதல்வர் சொன்னது தெரியாமல், முதல்வரின் பேச்சை கேட்காமல் வேறு என்ன செய்துவிடுவார்.

அது மக்களுக்காக மக்களிடம் சொன்னது என்று கூடவா நமது அமைச்சருக்கு தெரியாமல் போய்விடும். அப்படிதான் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், முதல்வரும் இதை அறிந்திருப்பார். அப்படியானால் அமைச்சரின் மீது என்ன நடவடிக்கை வருமோ(!), என்னவாகுமோ என்பதையும் பொறுத்திருந்துதான் நாம் பார்க்கவேண்டும். இதற்காக முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால்? துரைமுருகன் கூறியது நாகரிகமானது என்று (முதல்வர் போல்) ஏற்றுக் கொண்டுவிட்டால் போகிறது !

*****
ஒரு வேளை தைலமே தடவியிக்கலாமோ?
.

Friday, January 14, 2011

34-வது புத்தகக் காட்சி

என் முறை...
*****
'தனிமை தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்கப்பட்டபோது, 'புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்' என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு.

*****

சென்னையில் 34-வது புத்தகக் காட்சி கடந்த 4 ஜனவரி 2011, செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஏறத்தாழ 1.76 லட்சம்(இது வேறு!) சதுர அடியில் 646 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த காட்சி அரங்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குவிக்கப்பட்டுள்ளன.


சனி, ஞாற்றுக்கிழமைகளில் சென்றிருந்தேன். போன முறை வருந்தி அழைத்த நண்பர்கள் இந்த முறை முதல் அழைப்பிலேயே ஆர்வம் காட்டி வந்திருந்தனர். முதல் முறையாக இங்கே வந்த நண்பர்களுக்கும் என் அன்பு.

வரும் வரைதான் தயக்கம். வந்தால் நிச்சயம் அடுத்த முறையும் வருவீர்கள். அடுத்தடுத்த முறையில் என்னதான் இருக்கிறது என்று புத்தகத்தைப் புரட்டினால்..... அங்கே இருக்கிறது 'தூண்டில்'. ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் மாட்டிவிடும்.

சூழல் மாற்றப்பட வேண்டும்

இந்த ஆண்டு மனுஷ்யபுத்திரன் பேசியது, தீவிரமானது.

"தமிழகத்தில் புத்தகம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெறும்போது அங்கு தவிர்க்க முடியாமல் கேட்கும் குரல்; 'புத்தகங்களை வாங்குங்கள், புத்தகங்களை வாசியுங்கள்' என்பதாகும். எனக்குத் தெரிந்து உலகில் வேறு எந்தச் சமூகத்திலும் இப்படியொரு துர்பாக்கியமான சூழல் கிடையாது.

ஒரு படித்த சமூகம் புத்தகத்தைத் தேடுவதும் வாங்குவதும் வாசிப்பதும் மிக இயல்பானவை. ஆனால், இங்கே என்ன நடக்கிறது படித்தவர்கள் மத்தியில் நின்றுகொண்டுதான் 'படியுங்கள், ஏதாவது படியுங்கள்' என்று கண்ணீர் வரும் அளவுக்கு கோருகிறோம்.

மெத்தப் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் 'எனக்குப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது' என்பதைப் பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள்.

அவர்களே பல சமயங்களில் புத்தகங்களை வெளியிடவும் வருகிறார்கள். விசித்திரமான சூழலை மாற்றியே ஆக வேண்டும் நாம்" என்றார் மனுஷ்யபுத்திரன்.

"நிச்சயமாக இந்த சூழல் மாற்றப்பட வேண்டியது. மாற்ற வேண்டும் என்றால் எதாவது படியுங்கள் என்று கோருவதை தவிர்த்துவிட்டு, பேசுபவர்கள் முதலில் ஏதேனும் ஒரு நல்ல புத்தகத்தைப் பற்றி விரிவாகப் பேசிப் பழக வேண்டும். மனுஷ்யபுத்திரனை நான் வழி மொழிகிறேன்" என்றார் தமிழச்சி தங்கபாண்டியன்.

இவர்கள் விரும்புவதை போல மாற்றத்தை தான், நாம் வேறு மாதிரி முயன்று கொண்டிருக்கிறோம்.


குழந்தைகளை....

இங்கு பேசிய வைரமுத்துவின் பேச்சு வசிகரமானது.

"பெற்றோர்கள் குழந்தைகளைப் புத்தகங்கள் இருக்குமிடம் நோக்கி அழைத்துச் செல்லுங்கள். அவர்களைப் புத்தகங்களோடு புழங்கவிடுங்கள். அவர்கள் படிப்பது அப்புறம் இருக்கட்டும்; முதலில் அவர்கள் புத்தகங்களைத் தொட்டுப் பார்க்கட்டும். அந்தத் தொடுதல் - உலகை அவர்களுக்கு சரியான வகையில் அறிமுகப்படுத்தும்" என்றார் வைரமுத்து.

இங்கு பிரச்சனை, சரி வர நாமே பழகவில்லை. நாம் பழக்கவில்லை என்றால் ஒரு தலைமுறையே இதை இழக்கிறது. இதை தான், உணர மறுக்கிறோம்.

*****

இந்த முறை, வாங்கிய விவரம்.

1. திராவிட இயக்க வரலாறு - ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம்(பாகம் 1) ரூ.200

2. திராவிட இயக்க வரலாறு - ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம்(பாகம் 2) ரூ.200

3. முதல் உலகப் போர் - மருதன், கிழக்கு பதிப்பகம். ரூ.160
    (ஆரம்பப் புள்ளி முதல் இறுதிக் கட்டம் வரை)

4. இரண்டாம் உலகப் போர் - மருதன், கிழக்கு பதிப்பகம். ரூ.185
    (ஆரம்பப் புள்ளி முதல் இறுதிக் கட்டம் வரை)

5. புதுமைப்பித்தனின் சம்சார பந்தம் - கமலா புதுமைப்பித்தன், பரிசல் புத்தக நிலையம். ரூ.30

6. எம்.ஜி.ஆர். பேட்டிகள் - தொகுப்பு எஸ்.கிருபாகரன், மனோன்மணி பதிப்பகம். ரூ.130

7. குறுந்தொகை மூலமும் விளக்கமும், முல்லை பதிப்பகம். ரூ.150

8. கலித் தொகை மூலமும் விளக்கமும், முல்லை பதிப்பகம். ரூ.150

9. The history of mathematics கணிதத்தின் கதை - இரா. நடராசன், பாரதி புத்தகாலயம். ரூ.50 (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

10. சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு - கா. அய்யப்பன், மாற்று பதிப்பகம் ரூ.100

பகுதி இரண்டு

1. ஸ்மைல் ப்ளீஸ் - துக்ளக் சத்யா, அல்லயன்ஸ். ரூ.40

2. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன், தமிழினி ரூ.90 (சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல்)

3. தோரணத்து மாவிலைகள் - சுஜாதா, விசா பப்ளிகேஷன்ஸ். ரூ.80

4. சுவை சுவையாய் சமையல் குறிப்புகள் - கோமதி சந்திரசேகரன், ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ். ரூ.75

5. விண்வெளிக்கு ஒரு புற்வழிச்சாலை World Science Fiction, உலக விஞ்ஞானச் சிறுகதைகள். தொகுப்பும் மொழிபெயர்ப்பும் - இரா. நடராசன். பாரதி புத்தகாலயம். ரூ.30

6. உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி - S.R. Vas & Anita S.R. Vas, PUSTAK MAHAL ரூ.88

7. திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டிதழ் (ஜனவரி - டிசம்பர் 2010) - ரூ.160

8. திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டிதழ் (ஜுலை - செப்டம்பர் 2008) - ரூ.30

9. மௌனி படைப்புகள். முழுத் தொகுப்பு -தொகுப்பாசிரியர் சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம். ரூ.200

10. தமிழ் நாட்டுப் பழமொழிகள் (4000) - முல்லை பில். முத்தையா, முல்லை பதிப்பகம். ரூ.70

*****
ரசித்த ட்விட்டர் ganesukumar@twitter.com :

உடம்புக்கு எந்த நோவுன்னாலும் முதலில் நெத்தியில் விபூதி வைத்துவிடும் அப்பத்தாவிடம் நாத்திகம் பேச மனம் வருவதில்லை.

*****

Wednesday, October 27, 2010

தீண்டும் இன்பம்

எந்திரன் - நமது பார்வை

எந்திரன் - திரையிலோ, திருட்டு ஸிடியிலோ இணையத்திலோ பார்த்துவிட்ட பிறகு, அவரவருக்கு கருத்தும் அபிப்பிராயமும் ஏற்பட்டுவிட்டது. முதல் நாள் விடியற்காலை 4 மணிக்கு படம் பார்த்த ஆரம்ப சந்தோஷம் அலாதியானது. ஆரவாரம் அடங்கி, அவரவர் வேலைப் பார்க்க தொடங்கிவிட்டிருக்கிறோம். இப்பொழுது சற்றே உணர்ச்சிவசப்படாமல், நுரை விளக்கிப் பார்ப்போம்.


எந்திரனுக்கு அதை உருவாக்கியவரின் காதலி மேல் காதல். இந்த கதையின் திரைக்கதையில், சில சுவாரஸ்யங்கள் தள்ளி நிறைய கோட்டைவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றாக,

1. Prime numberன் அத்தனை சொல்லும் ரோபோவுக்கும் பெண்ணின் காதல் பெரிசு.

2. சுயசிந்தனை பெற்றவுடன் கவிதை படிக்க ஆரம்பித்து விடுகிறது, கட்டளையை மீறி.

3. ஒரு ரெட் சிப்பில் அத்தனை அடம் வந்துவிடுகிறது, ரெட் சிப்- உவமை. மக்களுக்கு புரியாமல் போய்விடக்கூடாது என்ற கவலை இயக்குனருக்கு.

4. ரோபோவினால் எல்லாம் முடியும் என்பதை வசனத்திலும் காட்சிகளிலும் திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பது. பாடல்களிலும் அதே.

5. எந்த வேலை செஞ்சாலும் - ஆராய்ச்சி செய்வது வரை - அழகான காதலி இருந்தே தீருவாள். இந்த க்ளிஷேவை எப்போது மீறுவோம்?

6. பாடல் காட்சிக்காக (கிளிமாஞ்சாரோ ரஜினியை கோழையாக காண்பிக்க வேண்டுமா என்ன? காமெடி முயற்சி பண்ணியிருந்தாலும் 'சாரி'.

7. ரெண்டு, ஒரு ரஜினி ஓகே. திகட்ட திகட்ட எதற்கு அத்தனை ரஜினி.

8. Climax Graphics காட்சிகளை எவ்வளவு தூரம் justify பண்ண முடியும் - இயக்குனரால்? கதைக்காக.

9. செக்ஸை தாண்டி யோசிக்கும் ரோபாவால், சிக்கலான கேள்விக்கு - 'hypothesis' சொல்லும் ரோபோவால், நுட்பமாக பிரசவிக்கும் ரோபோவால், 'ஐஸ்'ஸின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆச்சர்யம். ஒரு வேளை கதையின் ட்விஸ்ட் அதுதானோ!

10. ஏன் கடைசிவரை ஒரு 'பெண் ரோபோ' செய்யும் யோசனை, ரஜினிக்கு தோன்றவில்லை.

இருந்தும்.....இவ்வளவு இருந்தும்...


பணம் வைத்திருக்கிறார் - தயாரிப்பாளர்.

வித்தை கற்றவர் - இயக்குனர்.

அழகும், திறமையும், நடிக்கவும் - நாயகி.

பாடலாகட்டும், காட்சியாகட்டும், கிராஃபிக்ஸ் ஆகட்டும் - கூட்டணி, கூட்டணி உழைப்பும் அபாரம்.

அத்தனைக்கும் மேல் ரஜினி - மாஸ் பலம், ஓடும் குதிரை, ஜெயித்திருக்கிறது. 'வெற்றி' எல்லாவற்றையும்விட ஓங்கி உரைக்கும்.
*****
சமிபத்தில், சுஜாதா எழுதிய நாவலான 'தீண்டும் இன்பம்' படிக்க சந்தர்பம் வாய்த்தது (கிழக்கு பதிப்பகம்). கிட்டதட்ட பத்தாண்டுகளுக்கு முன் 'விகடனில்' தொடராக வந்திருக்கிறது. உங்களில் சிலர் படித்திருக்கலாம். நான் இப்போதுதான்.

நாவலின் ஒன் லைன் - கல்லூரிக்குப் போகும் பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றைவரியை வைத்துக்கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, ரசிக்கும்படி தந்திருக்கிறார். இதில் குறிப்பிடும்படியாக நான் கருதுவது, இன்றும் பல விஷயங்களில் முரண்படாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதுவே. பொழுதுபோகும்படியாகவே இருந்தாலும் இளைஞர்களுக்கான 'மணி' கட்டப்பட்டு இருக்கிறது. வாத்தியாராச்சே !

ரசித்த இடம் -

"தேசியக் கருத்தரங்கம். அதற்கு பரீட்சைக்குப் படிப்பது போல இரண்டு பேரும் லைப்ரரி ஹாலில் படித்தார்கள். 'Unplanned Pregnancy' என்ற புத்தக்கதை பிரிட்டிஷ் கவுன்சிலிலிருந்து ப்ரமோத் எடுத்து வந்திருந்தான். சன்னமான குரலில் படித்துக்காட்டினான்.

'ஒரு பெண்ணுக்கு வேண்டாத கர்ப்பம் என்பது மிகக் கடினமான, கடுமையான ஒரு அனுபவம் ...............................................................................................................................................
அமெரிக்காவில் மாத்திரை சாப்பிடுபவர்களில் 16 சதவிகிதமும், உறைகளைப் பயன்படுத்துபவர்களில் 16 சதவிகிதமும் வேண்டாத கர்ப்பம் அடைகிறார்கள்.'

ப்ரமோத் அதைப் படித்துவிட்டு நிமிர்ந்தான். 'இதெல்லாமா சொல்லப்போறோம் ப்ரமோத்' என்றாள்.

'ரிஸ்க் இருக்கிறது தெரியாம மாணவ-மாணவிகள் அது பத்திரமானதுன்னு நெனைச்சுக்கிட்டு மாட்டிக்கறாங்கன்னு சொல்லலாம். செக்ஸ் எஜுகேஷ்னுக்கு வலுவான சாட்சியமாப் பயன்படுத்தலாம் இல்லையா? என்ன?'

'நீங்க என்ன யூஸ் பண்றீங்கன்னு கலாட்டா பண்ணுவாங்களே ப்ரமோத்? பயமா இருக்கு.'

'கேட்டா, சிரிச்சிட்டு ஐஸ்வாட்டர்னு சொல்லு.'

'புரியலை.'

புரிஞ்சவங்க நம்ம கட்சி. புரியாதவர்களுக்கு ஒரு க்ளு- வயது வந்தவர்களுக்கான சைவ ஜோக் இது. அடம்பிடிப்பவர்களுக்கு - ஒரு நடை நாவலை படிச்சுட்டு வாங்க, அப்புறமா சொல்லுறேன்.

*****
ரசித்த கவிதை

Saturday, August 7, 2010

ஞானப் பல்


அடிக்கடி தொந்தரவான பல் வலி உபாதையுடன் அலுவலகம் வருகிறேன். பல் வலிக்கான காரணம் - ஞானப் பல் முளைக்கிறது.

                                
ஒருவருக்கு கடைசியாக முளைக்கும் நான்கு கடைவாய்ப் பற்கள்தான் ஞானப் பற்கள் (Wisdom teeth). 'விஸ்டம்' என்றால் அறிவு, ஞானம் என்று மட்டும் அர்த்தமில்லை. தற்பெருமை உணர்வு என்றும் பொருள் உண்டு. Late teen age 17 அல்லது 18 வயதிற்கு பின் நமக்கு நன்கு விபரம் தெரிந்து முளைப்பதால் இதை ஞானப் பற்கள் என்று சொல்கிறார்கள் !.

பொதுவா பற்களில் பற்சொத்தை, பயோரியா (பற்களை சுற்றியுள்ள எலும்பை தாக்கும் நோய்), ஹாலி டோலிஸ் (பற்சிதைவால் ஏற்படும் வாய் துற்நாற்றம்)- னு பிரச்சனை வரும். ஆனால் நமக்கு, (ஞான !) பல் முளைக்க போதுமான இடம் இல்லாத காரணத்தால் தொந்தரவு.

காரணம் தெரிந்திருப்பதால் டாக்டரை சந்திப்பதில் தாமதம். வலி அவ்வளவு திவிரம் இல்லை. முன்பொருமுறை இதே காரணம் ஏற்பட்டு இருக்கிறது. அதை பிறகு சொல்கிறேன்.பல் வலி முதல் பாதினா, டாக்டர் பார்க்கும், அனஸ்தீசியா, ஆஸ்பிட்டல் வாசம்னு ஜோரா போகும் இரண்டாம் பகுதி.


இதில் அனஸ்தீசியா பற்றி கொஞ்சம் சேர்ந்து சிந்திப்போம்.

அனஸ்தீசியா என்பது ஒரு கிரேக்கச் சொல். இதற்கு, இல்லாத என்றும், உணர்வுக்காக என்றும் பொருள். ஆலிவர் வென்டால் ஹோம்ஸ் என்பவர்தான் 1946-ல், இந்த வார்த்தையை உருவாக்கினார். உணர்வு நீக்கி கண்டுபிடிப்பால், பல வகை அறுவை சிகிச்சையின் கதவுகள் திறந்தன.

1946க்கு முன்வரை அறுவை சிகிச்சை என்றாலே அனைவருக்கும் நடுக்கம்தான். 'பல்லை' எடுப்பதுகூட பயங்கரமான விஷயம் தான். அறுவை சிகிச்சை செய்யும் நபருக்கு, ஆல்கஹால், ஓபியம் கொடுத்து, நல்ல பலசாலியான பத்து மனிதர்களைக் கொண்டு அவரைப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு, அறுவை சிகிச்சை நிபுணர், மிக துரித கதியில் சிகிச்சையை முடிப்பார். இந்த நிலையில் நோயாளி மிக பயங்கரமாக அலறுவார்; மயங்கிவிடுவார்; இறப்பு நேரிடுவதும் உண்டு.

*****
உணர்வு நீக்கியின் உபயோகம், பழங்கால 'இங்கா' இன மக்களிடம் இருந்திருக்கிறது. 'கோக்கோ' மர இலைகளைச் சுவைத்தபின் நோயுண்டாக்கும் கெட்ட ஆவியை விரட்ட மண்டையில் துளை போடுவார்கள். கோக்கோ மரப்பிசினை துளை போடும் இடத்தில் பலமணி நேரம் தடவி, அந்த இடம் மரத்துப் போகச் செய்து ஆவி விரட்டுவர். கெட்ட ஆவி உடலுக்குள் நுழைந்தது நோய்க்கு காரணம் என அக்கால மக்கள் நம்பினார்கள்.

*****

நாம் பாடத்தில் படித்தது போல், பிரிஸ்ட்லி(Priestley) என்ற அமெரிக்க கெமிஸ்ட் கி.பி.1772-ல் 'நைட்ரஸ் ஆக்ஸைடை'க் (N2O) கண்டு பிடித்தார். அதை சுவாசித்தால், மனம் லேசாகி, ரொம்ப சந்தோஷப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட சிரிப்பை அடக்கவே முடியவில்லை. தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார். எனவே இவ்வாயுவுக்கு 'சிரிக்கும் வாயு' எனப் பெயரிட்டார்.


கார்டனர் கியூன்கி கால்ட்டன் (Gardner Quincy Colton) என்ற நிபுணர் 1844-ம் ஆண்டு, டிசம்பர் 10 ஆம் நாள் நைட்ரஸ் ஆக்ஸைடின் சாதனைகளை நடுத் தெருவில் எல்லோரும் பார்த்து, மெய்சிலிர்த்து வியப்படையும்படி செய்து காட்டினார். பார்வையாளர் கூட்டத்தில் 'ஹோரஸ் வெல்ஸ்' (Horace Wells) என்ற பல் மருத்துவரும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். N2O தான் வலி நீக்கியாகச் செயல்படுகிறது என வெல்ஸின் மூளை சொல்லியது.

வெல்ஸ், நைட்ரஸ் ஆக்ஸைடின் குணத்தை, பல் பிடுங்கும் நோயாளிகளிடம் செலுத்தி சோதிக்க விரும்பினார். நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ள ரப்பர் பையைத் திறந்து, நோயாளியின் முகத்தருகே கொண்டு சென்றார். நோயாளி வாயுவை சுவாசித்ததும், தோல் வெளுத்து, கண் நீலமாகி, தலை சாய்ந்தது. நோயாளியின் பல்லை வெகு வேகமாகப் பிடுங்கினார். நோயாளி பயங்கரமாக அலறுவார் என எதிர்பார்த்தால், அவரிடம் ஒரு சத்தமும் இல்லை. நோயாளி கொஞ்ச நேரத்தில் கண்விழித்தார்.

1846ம் ஆண்டு வெல்ஸ் பெயர், உணர்வு நீக்கியின் கண்டுபிடிப்பில் வெளியானது. புத்தகம் வெளியிட்டார். நியூயார்க் போய் குளோரோபார்ம் பயன்படுத்தி, பல் பிடுங்குதலின் போது குளோரோபார்மே பாதுகாப்பானது, சிறந்தது என நிரூபித்தார்.

பின்னர் ஜனவரி, 1848 தற்கொலை செய்து கொண்டது தான் சோகம்.

 வெல்ஸ் உலகைவிட்டு மறைந்தபின் Father of anesthesia என்று மருத்துவ கழகம் பாராட்டியது.
*****

தலையனையாக புத்தகம் படித்து, நவீன மருத்துவதுடன் சடுதியில் பிடுங்கி விடுகின்றனர், இப்போதெல்லாம். என் ஞானப் பல்லில் ஒன்றை, ஏற்கனவே அனஸ்தீசியா பெற்றுகொண்டு இழந்துவிட்டேன். நோகாமல் பல்லை தட்டி கையில் கொடுத்து விடுகிறார்கள். இப்போது, இன்னொன்று போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது.

Monday, July 12, 2010

சொல்லியிருக்கலாம்...சொல்லிவிட்டேன்!


நான் அரை மூச்சாய் [இன்னும் முழு மூச்சாய் ஆரம்பிக்கவில்லை] புத்தகம் படிக்க ஆரம்பித்ததே 2 வருடங்களுக்கு முன் தான். அதற்கு முன் குமுதம், விகடன், அதுவும் எப்போதாவது கையில் மாட்டும் போது. 5 வருடம் கல்லூரியில் கழித்தேன். அந்த மாலை நேரங்களை என்ன செய்தேன் என்று இன்று கவலைப் படுகிறேன். அப்போவே ஒழுங்காய் படித்திருந்தால் இன்னைக்கு தில்லா…  -பிரதீப் குமார் (வலைப் பதிவர்)

மேலே சொன்ன 'பிரதீப் குமார்' என்ற பெயருக்குப் பதிலாக நம்மில் பல பெயரை போட்டுக் கொள்ளலாம். மேலே சொன்ன வாசகம் அவரது பதிவொன்றில் சொன்னது.

நபருக்கு நபர் வருடமும், சூழலலும் மாறுபடலாம். ஆதாரமான அந்த 'அடடா' நம் எல்லோருக்கும் பொது!.

அடடா... நாம் செய்யாமல் விட்டு விட்டோமே,  கொஞ்சம் யோசிச்சிருக்கலாம், அடடா... அப்படி பண்ணியிருக்கலாம் - என அந்த 'அங்கலாய்ப்பு' அனுபவம் நிச்சயம் நம்மில் இருக்கிறது. விதி விலக்கில்லாமல்.

*****

நான் கொஞ்சமே கொஞ்சம் போல் படிக்கும் காலத்தில் (பாடம் தவிர்த்து) படிக்காமல் போனேனே என்று அங்கலாய்க்க அவசியமில்லாமல் தேடித் தேடிப் படித்திருக்கிறேன். செமஸ்டர் நடக்கும் இடையில், இரவில் படித்திருக்கிறேன்.(கல்கியின் சிவகாமியின் சபதம்). பஸ் பயணங்களில், இரயில் பயணங்களில், காத்திருக்கும் வேளைகளில், ஏன் ஊருக்கு போய் பாட்டியை பார்க்கும் வேளைகளில் என விவஸ்த்தையில்லாமல், நேரங்காலம் பார்க்காமல் படித்திருக்கிறேன். கல்கி, சாண்டில்யன், லா.ச.ர, மௌனி, ஜி.நாகராஜன், நா.பிச்சமூர்த்தி, கலைஞர் மு.கருணாநிதி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, அனுராத ரமணன், சுபா, ராஜேஷ்குமார், பி.கே.பி, கண்ணதாசன், வைரமுத்து, வாலி என நீளும் பட்டியலின் எழுத்துகளை வெகு அருகில் வைத்து ரசித்திருக்கிறேன். உறவாடியிருக்கிறேன்.

வகை என பிரிக்காமல் சொன்னதைப் படித்தேன். மனம் போனபோக்கில் புத்தகங்களை தேர்ந்தெடுப்பேன். இன்னது என பாகுபடுத்தாத 'பொது' பிரிவிலேயே இருந்திருக்கிறேன்.

உலக சினிமாக்களை மாதம் ஒரு முறை போட்டுக் காட்டுவார்கள். சந்தாதாரர் ஆக ரூபாய் 50 அல்லது 60 வசூலிப்பார்கள். சந்தா கட்டி உறுப்பினர் ஆகி படம் பார்த்திருக்கிறேன். படம் முடிந்தவுடன் அதைப் பற்றி விவாதிப்பார்கள். படம் பார்த்து அவர்கள் சொல்லும் கருத்தையே என் கருத்தாக எடுத்துக் கொண்டு வெளி வருவேன். படம் பார்த்து புரியாத எனக்கு அவர்கள் விவாதிக்கும் விஷயமும் பாதிதான் விளங்கும். அப்புறம் நான் எங்கு அந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்வது!. இதெல்லாம் 2003 முந்தைய திருச்சியில். நான் பார்த்த தமிழ் படங்கள், ஊர் சுற்றும் என் ஆர்வம், நண்பர்கள் எல்லாம் புத்தகம் படிக்கும் ஆசைக்கு சமமாகவே இருந்ததால், நான் ஒரேயடியாக புத்தக புழுவாகவும் ஆகவில்லை. எதைதான் உருப்படியாகச் செய்தேன்?!.

அந்த சமயத்தில் நான் செய்து பார்க்க துணியாதது 'காதல்' மட்டுமே. பெண்களை கண்ணில் பார்பதோடு சரி... அதற்கும் காரணம் இருந்தது. எந்த பெண்ணும் என்னை 'மோகித்து' காத்திருக்கவில்லை. ஆத்து நீச்சல் (சுமாராக!) மட்டும் தெரிந்த எனக்கு 'காதல்' கடலில் குதிக்கும் தைரியமும் வாய்த்திருக்கவில்லை. நான் பார்த்த பெண்களுக்கு பின்புலமும் கூடவே சகோதரனும் இருந்ததால் என் 'உடல் பத்திரம்' கருதி வாளாவி இருந்து விட்டேன். என்னுடன் தவறி பழகியவர்களும் சகோதர பாசத்தைக் காட்டியவர்கள். இதில் என் நல்ல நண்பர்களை சேர்க்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று சிலரிடம் சிரித்து மட்டும் வைத்திருந்தேன். 'ஃபிக்செட் டெபாஸிட்'!. என் டெபாஸிடை களவாடிய 'களவாணி'களே அதிகம். தீராத வேலைக்கிடையில் செமஸ்டர் அறிவித்து, புண்ணியம் கட்டிக் கொண்ட பல்கலை கழகத்தின் நிர்வாகத்திற்கு என் 'காதல்' தேவை புரியவில்லை. ச்சே.... ?! என் பார்டர் தாண்டாத காதலும் தேறவில்லை. அதனால், பெண்களை பார்பதோடு சரி!

இதனால் எல்லாம் என் பாட படிப்பு தனியாக பாதித்தாக சொல்ல முடியவில்லை. ஒழுங்காகவே பாஸ் செய்து வெளிவந்தேன். (பட்ட கஷ்டம் நமக்குதான் தெரியும்!.)
*****

அந்த காலகட்டத்தில்தான், நான் முதன் முதல் படித்த முழு மொழிபெயர்ப்பு நாவல் 'பட்டாம்பூச்சி'.

ட்டாம்பூச்சி - ஹேன்றி ஷாரியர் எழுதிய Papillon என்னும் பிரெஞ்சு நூலின் ஆங்கிலம் வழியான தமிழ் மொழிபெயர்ப்பு. 800 பக்கங்களைத் தாண்டும் இந் நூல். மயிர்கூச்செறிதல் என்று சொல்வார்களே - அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன்.

நூலின் ஆசிரியர் தனது இருபத்தைந்தாவது வயதில் கொலைக் குற்றமொன்றிற்காக ( செய்யாத கொலையென்கிறார் ) ஆயுட் தண்டனை பெற்று அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, பிரெஞ்சுக் கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப் படுகிறார்.

அவர் ஒவ்வொரு சிறையாகத் தப்பிப்பதும், பிடிபடுவதும், அடைபடுவதுமாக 13 வருட காலத்தை, அவர் தனது விடுதலை மீதான இலக்கில் மீண்டும் மீண்டும் செலவிடுகிறார். கொடிய தீவுச் சிறைகளில் இருந்து புதைமணலிலும், ஒட்டைக்கட்டுமரங்களிலும் தப்பிப்பதுவும், மீண்டும் அகப்பட்டு இருண்ட தனிமைச்சிறைகளில் அடைக்கப்படுவதும், அதிலிருந்து வெளியேற தொடர்ந்து முயற்சிப்பதுமாக விரிகிறது கதை.

தமிழின் மிகச் சிறந்த மொழி பெயர்ப்பு நூலாகக் இதைக் சொல்லலாம். Must read வரிசையில் இந்த புத்தகத்திற்கு என்றும் இடமுண்டு. பெரும்பாலான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கதை ஓர் உண்மை சம்பவம்!. உலக புகழ் பெற இது மட்டும் காரணம் அல்ல. மனிதனின் சுதந்ததிர வேட்கை உலக பொது!. மனிதனின் அந்த சுய விருப்ப 'விடுதலை'. நான் யாருக்கும் அடிபணிய தேவையில்லை என்ற உற்சாகம். அந்த உணர்வு கொடுக்கும் உற்சாகமே! இதை உலக இலக்கியத்தில், உலக மக்களிடம் புகழ் பெற காரணம்.

தமிழில் பெயர்த்தவர் ரா.கி.ரங்கராஜன். ( 'சிவாஜி' பட சூட்டிங்கில் ரஜினிகாந்திற்கு நடிகர் விவேக் பரிசளித்தது இந்த நூலைத்தான்! )

ரா.கி. ரங்கராஜன்: 05.10.1927 ல் கும்பகோணத்தில் பிறந்தார். தன் 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புகள் சின்னத்திரையிலும் இடம்பெற்றுள்ளன. எழுத்துலகின் மேதாவி, பிஷ்மர் என்று போற்றபடுபவர்.

இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள், வரும் அடுத்த புத்தக கண்காட்சியில் வாங்கிப் படியுங்கள். குறித்து வைத்துக் கொள்ளலாம். அவசரப்படுபவர்கள் இப்போதே தேடி, ஆரம்பிக்கலாம்.
இது படமாகவும் வந்திருக்கிறது. அதன் ட்ரைலர்.




"ஓசைப்படாமல் சாதனை படைத்த தமிழர்களில் ஒருவரான எனது இனிய நண்பர். ரா.கி. ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம், வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு - இவை இவருடைய சிறப்புகள்"

- சுஜாதா

நீங்களும் உங்கள் நண்பர்களிடம் இந்த பத்தியின் தலைப்பைச் சொல்லி பேச்சை ஆரம்பித்து விடுங்கள்.

அடடா... இதை முன்பே சொல்லியிருக்க வேண்டுமோ!

Sunday, May 30, 2010

ஐந்து நட்சத்திர 'தயிர் சாதம்'


இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட போனதில்லை. சமிபத்தில் ஐந்து நட்சத்திர விடுதி செல்லும் வாய்ப்பு கிட்டியது, நண்பன் ரூபத்தில்.

பார்ட்டி என்றாலே இரவுதான். நான் போய் சேர்ந்தபோது மெல்லிசை நிகழ்ச்சிகள் முடிந்திருந்தன. எனக்கு முன்பே நண்பர் அங்கு காத்திருந்தார். சரியான நேரத்திற்கு வந்திருப்பதாகவும் இனிமேல் தான் 'மற்ற சங்கதிகள்' என்றபடி நிகழ்ச்சி நடந்த மைய பகுதியை அடைந்தோம்.

மூன்று ஹால்கள் பிரிக்கப்பட்டிருந்தன. மெல்லிசை நிகழ்ச்சிகள் காண இருந்த இடம். கண் சிமிட்டும் கலர் கலர் வெளிச்சத்தில், அதிரும் இசைக்கிடையில் நடனமாட ஒரு இடம். சாப்பிடும் இடம்.

மிக மிக நவீன உடையில் யுவதிகளும் இளைஞர்களும் மற்றும் பிரபலங்கள் வந்திருந்தவர்களாலும் நிரம்பி இருந்தது. சொல்லி வைத்தார் போல் அத்தனை பெண்களும் ஒல்லியாக சிவப்பாக. ஆங்கிலமும் இந்தியும் உருதும் தமிழும் பேசிக்கொண்டிருந்தார்கள். இளைஞர்கள் இடுப்புக்கு கீழ் இறங்கிய ஜீன்ஸும், ஷேவிங்கில் இருந்து பாதி தாடியிலும் வந்திருந்தார்கள். குளித்து தலை துவட்டியவுடன்  வந்தவர்களுள் (!)  ஒருவன் மட்டும் கூம்பு வடிவில் தலை வாரியிருந்தான். பெரும்பாலானோர் முடி வெட்டவும், தலை வாரவும் மறுத்திருந்தனர். தெரிந்த கடைகள் விடுமுறை விட்டிருக்கலாம். மற்றபடி நாகரிகமாக நடந்துக் கொண்டனர்.

Soft drinks ஆக ஆப்பிள் ஜுஸ் ஆரஞ்ச் ஜுஸ் மற்றும் பியர் வகைகள் ஒரு புறம். Hot drinks ஆக Scotch whisky rum என மற்றொறு புறம் விநியோகிக்கப்பட்டது. இடையிடையே சேவகர்கள் snacks-ஐ கையில் ஏந்தி நடந்தார்கள். கையில் கோப்பையுடன் இருப்பதே கௌரவமென அறிவுறுத்தப்பட்டு, Soft drinks-ஐ நிரப்பிக் கொண்டேன்.

ஷாம்பெய்ன் குலுக்கி நுரை தெளித்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள். ஹை ஹீல்ஸில் தத்தி தத்தி வந்து நிஜ நடனமாடினார்கள். நாசூக்காய் கைபிடித்து அழைத்து வந்தவன் அழகாய் இருந்தான். வேறொறுவன் மைக் பிடித்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தான்.

ஆண்களும் பெண்களும்  கட்டியே அன்பை வெளிப்படுத்தினார்கள். விடை பெறும்போது அணைத்து முத்தமிட்டார்கள். அணைத்து முத்தமிட்டதில் மனதளவில் தொந்திரவுக்கு உள்ளானர் சிலர். நாம் உட்பட.

வந்திருந்த பெண்களையும் சூழல்லையும் பார்த்ததில் ஒன்று நிச்சயம். இது வேறு உலகம். இவர்கள் வெயிலில் அலைபவர்கள் அல்ல, கடைகளில் பேரம் பேச மாட்டார்கள், poor என்பதன் அர்த்தம் மட்டும் தெரியும், நாகரிகமாய் நடந்துக் கொள்ளவும் பழகவும் சிறு வயதிலே பழக்கப்பட்டவர்கள். ஏக சிக்கனமாய் உடையணிந்திருந்தாலும் ஆண்களை எங்கே நிறுத்துவது என்று கற்றவர்கள். நிறுத்தும் பெண்களிடமும் நெருக்கம் காட்டத் தெரிந்தவர்கள். ஆங்கிலத்தில் சிரிப்பவர்கள், நகம் வெட்டவும் முடி திருத்தவும் சில நூறுகளில் காரியத்தை முடிப்பவர்கள். வாசனையாய் இருப்பார்கள். நிச்சயம் படித்தவர்கள்.

தமிழ் தெரியுமா என்று கேட்டால் 'தமிழில் எத்தனை poem படிச்சிருக்கேன் தெரியுமா. ஜுஜு கூட சொல்லும்' என்பார்கள். ஜுஜு என்பது அவர்கள் வளர்க்கும் நாயா அல்லது பாய் ஃப்ரெண்ட்டா என்று குழம்பக் கூடாது.

******

தட்டு நிறைய வகை வகையான உணவுகள். ஆடு, கோழி, பிரியாணி - நான் வெஜ் வகையறா. ஃப்ரூட் சாலட், ஐஸ் கிரீம், குலோப் ஜாமுன், வெஜ் உணவு என வெரைட்டி விருந்து. ஏற்கனவே நிறைந்திருந்ததில், தயிர் சாதம் வைத்துக்கொண்டேன். அருமையான ருசி. சாப்பிட்ட விருந்து பிளேட் கணக்கு. உண்மையாய் என்று தெரியவில்லை, ஒரு பிளேட்டின் விலை சற்றேறகுறைய நாலு இலக்கத்தில் சொன்னார்கள்.

தயிர் சாதத்தை தங்கம் போல பாவித்தேன். ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு கூப்பிடும் தூரத்தில் இருந்தது. பய பக்தியுடன் கீழே வைத்துவிட்டேன்.

Rest Room-ல் டி வி வைத்திருக்கிறார்கள். சிறிய சைஸ். ஆறு பேர் நிற்கும் இடத்தில் இரண்டு டிவி. டிவியில் 'ஷேர் மார்க்கெட் அலசலில் கருத்து சொல்லிக்கொண்டிருந்தார்' நிபுணர் ஒருவர்.

அண்டா குடித்துவிட்டு இயற்கை அழைத்தவர்களுக்கு 'செய்தி' மழை. auto flush வசதி. சுடு தண்ணீர் பைப், சாதா தண்ணீர் பைப், கை கழுவ, முகம் கழுவ, கையை காய வைக்க, ஷு துடைக்க, முகம் பார்க்க என ஒளிரும் டெக்னாலஜி வெளிச்சத்தில் பணம் ஜொலித்தது.

'உள்ளே' கழுவுவதற்கு பதிலாக டிஷ்யு பேப்பரை வைத்திருக்கிறார்கள். இத்தாலி மேக். அதன் நோக்கம் தவிர்த்து, கை மட்டும் துடைத்துக் கொண்டேன். நல்லவேளை!

******

நண்பர் கேட்டார், 'எப்படிபா இருந்தது?'

'பெரிய மனிதர்கள் அடிக்கடி வந்து போகும் இடம், ஒரு சொம்பு வாங்கி வைத்திருக்கலாம்'.

Wednesday, May 19, 2010

மோதிரக்கையால் குட்டுப்பட்ட ரஹ்மான்


போன சனி கிழமை செந்தமிழ் மாநாட்டு மைய பாடல் அடங்கிய குறுந்தகட்டை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அதை தூர்தர்ஷனில் லைவ்வாக போட்டார்கள்.

'என் ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு அப்போது டி.ஆர்.பாப்பாதான் இசையமைத்துக் கொண்டிருந்தார்.​ ஒரு ஒளிப்பதிவுக்காக சென்றிருந்த போது ஒன்பது வயது சிறுவன் கீ போர்டு பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தான். ​ 'இவன் யார்' என்றதும் டி.ஆர்.​ பாப்பா 'இந்த பையன்தான் உங்கள் பாட்டுக்கு இசையமைக்கப் போகிறார்' என்றார்.

​'உலக அளவில் என் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.​ இவனை போய் என் பாடலுக்கு இசையமைக்க வைத்திருக்கிறாய்' என்றேன்.​ பின் அந்த சிறுவனிடம் நெருங்கி 'என் பாடல்களையெல்லாம் கேட்டிருக்கியா' என்றேன்.​ 'உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி' என்றான்.​ உடனே 'உலகம் பிறந்தது எனக்காக....​ ஓடும் நதிகளும் எனக்காக....' என நான் பாட எம்.எஸ்.வி.​ செய்யாத விஷயங்களையெல்லாம் அவன் கீ போர்டில் செய்து என்னை பிரமிக்க வைத்து விட்டான்.​

அன்று என் விரலில் கிடந்த வைர மோதிரத்தால் அவன் தலையில் குட்டு வைத்தேன்.​ அந்த குட்டுதான் இப்போது ரஹ்மானை இவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறது'.​

'அதை அவர் பேசும்போது குறிப்பிட்டிருக்க வேண்டும், நன்றி மறக்கக் கூடாது'.

தன் கடந்த கால நினைவுகளை இப்படி பகிர்ந்துக் கொண்டார் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

முதல்வர் முன்னிலையில் பொதுவாக சிரித்து வைத்தார் ரஹ்மான்.

டி.எம்.எஸ் பாடுவதில் வல்லவர். மேடை பேச்சில் அல்ல. இந்த மாதிரி சந்தர்பங்களில் எழுதி வைத்து படித்து விடுவது சிறந்தது. முன்னரே பிழை திருத்த வழியாவது உள்ளது.

                                                                *******

அப்புறம் தூர்தர்ஷனுக்கு ஒரு வார்த்தை, துல்லியமான ஒளிப்பதிவு. அதில் குறையில்லை. எடிட்டிங்கில் இன்னும் கவனம் தேவை. ஒவ்வொருவராக வந்து பரிசு வாங்கும் போதும் அவர்களை காட்டாமல் சம்பந்தம் இல்லாமல் ஜனங்களை காட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பப்போ, கேமர நிலைக் கொள்ளமல் ஆடுகிறது. இந்த சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்திவிட்டால் மட்டும் போதாது.

யானை பலம் உள்ள மீடியாவை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தயிர் சாதம் மட்டும் வைப்பேன் என்றால் எப்படி. உங்களுக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் கியர் மாற்றி போய் கொண்டிருக்கிறார்கள். ரூபாய் வாங்கிக்கொண்டு ஆசிர்வதித்தது போதும். விலங்கை அவிழ்த்து விடுங்கள். வயசான பாகன்கள் ஓய்வெடுக்கட்டும். யானையின் பலம் அம்பாரி சுமப்பதும் பிச்சை எடுப்பதில் மட்டும் இல்லை.

2010 லும் சன்னோ, சாதா டிவியோ நுழையாத கிராமங்கள் உள்ளன.

நம்புங்கள்.

இன்னமும் தூர்தர்சன் மட்டும் பார்க்கும் குடும்பங்களை எனக்கு தெரியும்.

இருந்தும் எங்கோ பிழை, யார் யாரெல்லாமோ காரணம். எதுவெல்லாமோ தடை. எவ்வளவு சக்தி வாய்ந்த மீடியா. ம்ம்..... ஆதங்கமாக இருக்கிறது.

Saturday, May 15, 2010

விஜய் 50 நம் பார்வை

விஜய்யின் 50 வது படம் வெளிவந்தது அனைவருக்கும் தெரியும்.

படம் ரிலீஸ் ஆன இரவு தீவிர ரசிகனிடம் போன் போட்டு அபிப்ராயம் கேட்டேன்.

"எங்க தலைவரோட அடுத்த படத்தை பார்க்கதானே போறிங்க, அப்ப பாருங்க சும்மா கல்லக்குவாரு".

"டேய்.. நான் இன்னைக்கு ரிலீஸ்ஸான படத்தை பத்திக் கேக்குறேன்?"

"அதான் சொல்றோமில்ல.. அடுத்த படத்துல பாருங்கன்னு..."

"புரிஞ்சுருச்சு"

"எங்க தலைவரு என்ன சொன்னாரு, எந்த எக்ஸ்பொக்டேஷனும் இல்லாம வாங்கனு தானே, அப்புறம் ஏன் அவரை ஓவரா சொல்லறீங்க"

"நான் ஒன்னும் சொல்லலையேடா"

"அவரு ஃபார்முலா படி நடிச்சுட்டு வாராரு.. அப்படிதான் இருக்கும்"

"எப்படி?"

"உங்களுக்கெல்லாம் சொன்னா புரியாதுங்க, போய் பார்த்தான் தெரியும்"

"இல்ல இப்பவே புரியுது"
                                                          *****

அப்புறம், விகடன்ல 'விஜய்க்கு பகிரங்கக் கடிதம்' வருகிற அளவுக்கு விஷயம் ஆகிப் போச்சு.

அந்த கடிதத்தோட சாரம்சம்.

'விஷ்ணு', 'ரசிகன்', 'கோயம்புத்தூர் மாப்ளே' போன்ற படங்கள் மக்கள் மத்தியில் உங்களைப்பற்றி உருவாக்கி வைத்திருந்த எண்ணங்களைச் சட்டென்று மாற்றிப்போட்டது 'பூவே உனக்காக'. நீங்கள் நடித்த 'காதலுக்கு மரியாதை' மக்கள் மத்தியில் உங்களுக்கு மரியாதையான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 'பிரியமுடன்' படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக சவாலான வேடத்தையும் சாதித்துக் காட்டினீர்கள். 'லவ் டுடே' படத்தில் பாசமுள்ள மகனாக மிரட்டி எடுத்தீர்கள். 'துள்ளாத மனமும் துள்ளும்', 'குஷி' போன்ற படங்கள் மூலம் பலதரப்பட்ட வயதினரும் உங்கள் ரசிகர்கள் ஆனார்கள்.

'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நீங்கள் பட்டையைக் கிளப்பிய காமெடியை இன்றும் சேனல்களில் பார்க்கும்போது சிரிப்பு பொத்துக்கொள்ளும். ஆனால், திடீரென்று 'பத்ரி' தொடங்கி 'புதிய கீதை' வரை தடம் மாறினீர்கள். தொடர் தோல்விகள். ஆனாலும், 'திருமலை' உங்கள் திருப்புமுனைதாங்ணா!

பல்லு விளக்குவதற்குக்கூட பஞ்ச் டயலாக் பேசுவது, காத்துல பறந்து கரணம் அடிப்பது, அம்புட்டுத்தான்... ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துவிட்டீர்கள்!

உங்கள் நினைப்பு சரிதான். நீங்கள் அடித்த 'கில்லி', நடித்த 'திருப்பாச்சி', வெடித்த 'சிவகாசி' எல்லாமே வசூலில் சாதனை படைத்தன. அதில் இருந்துதான் படம் ஹிட் அடிக்க 'பஞ்ச் டயலாக்கும், பான்பராக் ரவியுமே போதும்' என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். இங்கு இருந்துதான் உங்களையும் அறியாமல் எங்களை ஏமாற்ற ஆரம்பித்தீர்கள். இந்த இடத்தில் 'கில்லி'யைப்பற்றி இன்னும் சொல்ல வேண்டும். அதில் ஆக்ஷன், காமெடி, காதல் எல்லாமே பக்காவாக இருந்தது. 'அப்படிப் போடு... போடு' என்று தமிழ்நாடே ஆடித் தீர்த்தது. அநேகமாக நீங்கள் நடித்து எல்லோருக்கும் பிடித்த கடைசிப் படம் என்ற அந்தஸ்து தற்போது வரை 'கில்லி' வசம்தான்.

நீங்கள் நடிக்க வந்தபோதும், அதற்குப் பின்பும் வந்த விக்ரம், சூர்யா, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி என்று பலரும் வித்தியாசமான கதைகளில், வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துத் தங்கள் திறமையை நிரூபித்தனர். ஆனால், நீங்கள் குறைந்தபட்சம் ஹேர் ஸ்டைலைக்கூட மாற்ற ரெடியாக இல்லை. (சத்தியமாச் சொல்றேண்ணா... 'வேட்டைக்காரன்' போஸ்டருக்கும் 'சுறா' போஸ்டருக்கும் அனுஷ்கா, தமன்னாவை வைத்துத்தான் நான் வித்தியாசம் கண்டுபிடிக்கிறேன்!) இந்தப் பிடிவாதம் கெட்டப்பில் மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், கதையைக்கூட மாற்ற மாட்டேன் என்று அடம்பிடித்தால் எப்படிங்ணா?

விஜய் படம் என்றாலே, சடை முடி வில்லன்கள், பஞ்ச் டயலாக், ஸ்லோ மோஷனில் நடப்பது, பில்ட்-அப் கொடுப்பது என்று ஆகிவிட்டதே.

உங்களைப்பற்றியும், உங்கள் படங்களைப்பற்றியும் கிண்டல் அடித்து எஸ்.எம்.எஸ்கள் கொட்டிக் குவிகின்றன என்பது உங்களுக்கும் தெரியும்.

உங்க படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் இருந்தாலும், மத்தவங்க உங்களைத்தான் பெரிய வில்லன்னு சொல்றாங்க!

இப்படி ஒரு ரசிகனோட பார்வைல ஆதங்கத்தை கொட்டுற மாதிரி இருக்கும்.

இதுக்கும் மேல தனியா என்னனு விமர்சனம் வேற சொல்ல? அட்லீஸ்ட் அடுத்த படத்துல நாம் விமர்சனம் சொல்ற அளவுக்காவது நடிச்சா சரி.

Tuesday, April 27, 2010

என் 'போன' வாரம்

போன வாரத்தின் அதிர்ஷ்ட நாளின் ஒரு பொழுதில் என் மெயில் பாக்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானது. எனது sent item 'மாத கடைசி' சம்பளகாரனின் பாக்கெட் போலானது. 'காலி'. இதன் விளைவு சற்று தாமதமாகத் தான் தெரிந்தது.


என் அனுமதியின்றி நண்பர்களுக்கு message forward ஆகி போக ஆரம்பித்தது. டெல்லியில் இருக்கும் என் நண்பன் கூப்பிட்டு சொன்ன பிறகுதான், விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. எனது இந்த கையறு நிலையறிந்து எங்கேயும் அரை கம்பத்தில் கொடி பறக்கவிட அரசாங்கம் மறுத்துவிட்டது. மான நஷ்ட வழக்கு தொடரலாமென்று தீர்மானித்து, வக்கீல் நண்பரை தொடர்பு கொண்டேன். யார் மேல் போடுவது என்ற ஒற்றை கேள்வியில் என் net result தெரிந்துவிட்டது. திருவாளர் வைரஸ் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்துவது சாத்தியமில்லை என்பதால், தீர்மானம் கை விடப்பட்டது.

என் நிலை விளக்கி, காணமல் போனதை முடிந்தால் கண்டுபிடித்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டி விரும்பி கையியொப்பம் இட்டு customer care க்கு மெயில் அனுப்பினேன். என் நிலைக்காக அவர்கள் வருந்துவதாகவும், எனக்கு உதவுவதற்காகவே காத்திருப்பதாகவும் மேலும், மிக சரியான விவரங்கள் தந்தால் அவர்கள் ஒத்துழைப்பு தர ஒரு மனதாக தீர்மானித்து விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். பதில் மெயிலை பத்திர படுத்திக்கொண்டேன்.

உலகின் முதல் கம்ப்யூட்டர் வைரஸ், கார்னெல் பல்கலைக்கழக மாணவர் மோரிஸால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 2,1988-ம் வருடம் 99 வரியில் எழுதபட்ட சிறிய program. சின்னதாக உள்ளே நுழைந்து ஒவ்வொரு ஃபைல்களாக அழித்து கம்ப் யூட்டரின் செயல்பாட்டையே முடக்கியது மோரிஸின் வைரஸ். முதல் மூன்று நாட்களில் ஆறு ஆயிரம் கம்ப்யூட்டர்கள் காலி. பல்கலை கழகம், இராணுவம், மருத்துவ ஆராய்ச்சி கூடம் என பல இணையதளங்களை ஒரு கை பார்த்தது. மொத்தம் 100 மில்லியன் டாலர் நஷ்டம். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம். நடு இரவு 34 நிமிடம் கழித்து தான் (நவம்பர் 3,1998) விளைவுகளை உலகம் உணர ஆரம்பித்தது. அந்த வகை வைரஸ்களுக்கு மோரிஸ் வார்ம் என்று பெயர் சூட்டிக் கௌரவித்தார்கள். 'இணையம் எங்கே வீக்காக இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதனால்தான் வைரஸை உருவாக்கினேன். மற்றபடி நான் நல்ல பையன்' என்று அறிக்கைவிட்டான் மோரிஸ்.

என் வரையில் இணையத்தில் பாதுக்காப்பாக உலவ:                                        Internet security உள்ள Antivirus காசு கொடுத்து வாங்கிக்கொள்வது. இலவசமாகவும் கிடைக்கிறது. தெரியாதவர்களிடம் இருந்து வரும் மெயிலை திறக்காமலே 'டெலிட்' செய்து விடுவது. நம் பாஸ்வேர்டை ரகசியமாக காப்பது. முக்கியமா மெயிலில் வருகிற எந்த லிங்கையும் கிளிக்காமல் இருப்பது.

இல்லையென்றால் இன்னொரு வழியும் இருக்கிறது. கைகள் ரெண்டும் மேல் தூக்கியவாறு, கை ஒட்டியபடி கிழக்கு முகம் பார்த்து, வலது பக்கம் மூன்று முறையும், இடது பக்கம் மூன்று முறையும் சுற்ற வேண்டும்.

சுத்தினால் இழந்தது மீண்டு வருமா?

புண்ணியம் வரலாம்.

Wednesday, April 14, 2010

புத்தகம் வாங்கிய பட்டியல் தொடர்ச்சி

33 வது புத்தக சந்தையில் வாங்கிய புத்தகங்களின் விவர தொடர்ச்சி.....


பகுதி 2
1.குட்டி இளவரசன் -அந்த்வான் து செந்த்~எக்சுபெரி -பிரெஞ்சிலிருந்து தமிழில் வெ.ஸ்ரீராம்,ச.மதனகல்யாணி, க்ரியா ரூ.100
இருநூறுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு

2. நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது -ஹாருகி முரகாமி, வம்சி புக்ஸ் ரூ.80
நவீன ஜப்பானியச் சிறுகதைகள்.

3. சிறுவர் சினிமா -விஸ்வாமித்திரன், வம்சி புக்ஸ் ரூ.80
சிறந்த உலகத் திரைப்படங்கள்.

4. இறுதி சுவாசம் -லூயி புனுவல் தமிழில்: சா. தேவதாஸ் வம்சி புக்ஸ் ரூ.200
உலகபுகழ் பெற்ற திரைப்பட இயக்குனரான லூயி புனுவலின் வாழ்க்கை மற்றும் திரைப்பட அனுபவங்கள் பற்றியது.

5. யுவான்சுவாங்க் -சந்தியா பதிப்பகம் ரூ.140
உலகபுகழ் பெற்ற யுவான்சுவாங்க் பயணக்குறிப்புகள் தமிழில் வெளியாகிவுள்ளது.
பௌத்த கால இந்தியாவை பற்றிய சித்திரங்களை இதில் இருந்து துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது.



பகுதி 3

1. ஸ்ரீரங்கம் டு சிவாஜி -ரஞ்சன், குமுதம் பு(து)த்தகம், ரூ.80
 சுஜாதாவின் கதை

2. எப்போதும் பெண் -சுஜாதா, உயிர்மை பதிப்பகம், ரூ. 110

3.குருவிகள் பறந்து விட்டன பூனை உட்கார்ந்திருக்கிறது -ஜே. மாதவராஜ், வம்சி புக்ஸ் ரூ.50

4.மரப்பாச்சியின் சில ஆடைகள் -தொகுப்பு. ஜே. மாதவராஜ், வம்சி புக்ஸ் ரூ.60
(இது வலையுலகில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு)

5. திருவாசகம் உரையுடன் -உரையாசிரியர் புலியூர்க் கேசிகன், வானதி பதிப்பகம் ரூ.100

6. பாரதியார் சரித்திரம் -செல்லம்மா, வ.உ.சி நூலகம், ரூ.50
இந்த அறிய நூலை நமக்கு அளித்திருக்கிறார் அவரது வாழ்க்கை துணைவி

7. நெம்பர் 40 ரெட்டைத் தெரு -இரா. முருகன், கிழக்கு பதிப்பகம் ரூ.125

8. மஹாபாரதம் பேசுகிறது -சோ, அல்லயன்ஸ் ரூ.600 (இரண்டு பாகங்கள்)

33 வது புத்தக சந்தை


இந்த புத்தக கண்காட்சிக்கு போயிருந்த போது மனசுக்கு ரொம்ப மகிழ்சியா இருந்தது. இங்கு எத்தனை பேர் வந்தாங்க, எவ்வளவு புத்தகம் விற்பனை ஆச்சு அப்படிங்கற விவரம் எல்லாம் தினசரி பத்திரிக்கையில வந்துகிட்டே இருந்தது. இந்த புள்ளிவிவர கணக்குகளை விட நிறைய பேர் ஆர்வமா வந்தது திருப்தியா இருந்தது. 

என் பங்குக்கு நண்பர்களை (வற்புறுத்தி) அழைச்சுட்டு வந்திருந்தேன். புத்தகம் படிக்கும் வழக்கம் இருப்பவர்கள் நான் கூப்பிட்டதும் வர தயாராயிருந்தனர். ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், ஆர்வம் இருந்து படிக்க நேரம் இல்லைனு சொல்றவங்களை வரவச்சு சில புத்தகங்களை பரிந்துரைச்சேன். புத்தகம் படிக்காதவர்களை கூட்டிட்டு போய் அங்க இருக்கற சூழ்நிலையை காண்பிச்சேன்.

ஒரு ஆர்வத்தையும் சின்ன சபலத்தை உண்டு பண்ணி அடுத்தடுத்து இங்க வந்தா போதும் ஏதோ ஒரு தூண்டில் விழுந்து விடும்.

இந்த முறை அம்மாவும் தங்கையும் கூட்டிட்டு போயிருந்தேன். நடிகர் கமல் ஹாசனை பார்த்து பரவசபட்டார்கள். 
நான் என்னென்ன வாங்கினேன்னு கேட்ட நண்பர்களுக்கு, இதோ அந்த விவரம்....

 பகுதி 1 
1.உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன், விஜயா பதிப்பகம், ரூ. 200
2.சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா, உயிர்மை பதிப்பகம், ரூ. 200
3.கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன், அன்னம் வெளியிடு ரூ.80, காலச்சுவடு பதிப்பகம் ரூ.150
4.சினிமாவுக்கு போகலாம் வாங்க! -முனைவர் கு.ஞானசம்பந்தன், விஜயா பதிப்பகம், ரூ. 75
5.இரவில் நான் உன் குதிரை (சில தேசங்களின் சில சிறுகதைகள்) -கட்டுரை - காலச்சுவடு  பதிப்பகம் ரூ.125
6.கிராமியக் கதைகள் - கி. ராஜநாராயணன், அகரம் வெளியிடு ரூ.70
7.புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம் - சுந்தரம் ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம் ரூ.80
8.அண்ணாவின் குட்டிக் கதைகள் - அறிஞர் அண்ணா, செல்லப்பா பதிப்பகம் ரூ.25
9.நகைச்சுவை -திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், குகஸ்ரீ வாரியர் பதிப்பகம் ரூ.22
10.அவ்வையார் பாடல்கள் (தமிழ் உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும்) -பேராசிரியர்  சு.ந.சொக்கலிங்கம், வானதி பதிப்பகம் ரூ.40
11.எளிய தமிழ் இலக்கணம் -டாக்டர் வை. தட்சிணாமூர்த்தி, திருவரசு புத்தக நிலையம் ரூ.50
12.பட்டினத்தார் பாடல்கள் -விளக்கவுரை திரு.வி.க. கங்கை புத்தக நிலையம் ரூ.70