Showing posts with label மொழிபெயர்ப்பு நூல்கள். Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு நூல்கள். Show all posts

Monday, March 28, 2016

முயலும் கேள்வி - Alice in Wonderland



"ஆற்றின் கரையில் எதுவும் செய்யாமல் வெறுமனே சகோதரியோடு உட்கார்ந்திருப்பது ஆலிஸிற்கு சோர்வு தருவதாக இருந்தது. ஒன்றிரண்டு முறை சகோதரி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எட்டிப் பார்த்தாள். அதில் படங்களோ, உரையாடல்களோ இல்லை. படங்களும் உரையாடல்களும் இல்லாத புத்தகத்தால் என்ன பிரயோஜனம் என ஆலிஸ் யோசித்தாள்".

நீங்க நினைப்பது சரி. இவள் அதே ஆலிஸ்தான்.


'ஆலிஸின் அற்புத உலகம்' Alice in Wonderland கதை இப்படிதான் ஆரம்பிக்கறது. படிக்கும் பழக்கம் ஏற்படும் ஆரம்பங்களில் எல்லா சிறார்களுக்கும் தோன்றும் கேள்வி - படங்களோ, உரையாடல்களோ இல்லாத புத்தகத்தை இந்த பெரியவர்கள் எப்படி படிக்கிறார்கள்? அதில் என்ன இருக்கும்? - என்பதாக இருக்கிறது.

முயல் வளையில் விழுந்துவிடும் ஆலிஸின் பதட்டத்திலிருந்து கதை விரிகிறது. ஆலிஸின் உலகம் வியப்பும் மர்மமும் நிறைந்த ஒரு மாயக்கனவு. கணித மேதையான லூயிகரோல் 1865ல் குழந்தைகளுக்காக எழுதிய இந்த நாவல் ஒரு ஆச்சரியம் ! கணிதத்தில் பெரும் ஆர்வம் கொண்ட லூயிகரோல் தீர்க்க முடியாத புதிர்கணிதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இக்கதையில் கணிதத்தின் பல சூட்சுமங்களும் தேர்ந்த உரையாடல்களும் வியப்பாக இருக்கிறது.


இந்த உரையாடலை கேளுங்கள்:

ஆலிஸ் "இவர்களோடு சற்று விளையாடலாம்" என நினைத்துக்கொண்டு, சொன்னாள்: "வாருங்கள் நாம் விளையாடலாம். நான் உங்களிடம் சில விடுகதைகள் போடுவேன். நீங்கள் விடை சொல்ல வேண்டும்"

"உனக்கு பதில் தெரியுமா ?" என முயல் கேட்டது.

"நிச்சயமாகத் தெரியும்"

"அப்படியானால் அது எதற்கு ?" முயல் தொடர்ந்து கேட்டது. ஆலிஸ் அவசரமாக பதில் சொன்னாள்.

"குறைந்தபட்சம் நான் சொல்வது உங்களுக்கு தெரிந்த அதே புதிர்தான்"

தொப்பிக்காரன் சொன்னான்: "அது அப்படியல்ல. நீ இப்படியும் சொல்லலாம். நான் தின்பதைப் பார்க்கிறேன். நான் பார்ப்பதைத் தின்கிறேன். இரண்டுமே ஒன்று என்று".

இந்த உரையாடலில் என்ன விஷேசம்..? இது ஆண்டிமெட்டபோல் - antimetabole. வார்த்தைகளை திருப்பி போடுவதால் உருவாகும் ஒருவித வாக்கிய கட்டமைப்பு. கொஞ்சம் விளக்குகிறேன்.

எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் சொல்லுவார், 'நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நாட்டிற்காக நீ என்ன செய்தாய் என கேள்?' என்பார். உண்மையாக இதை சொன்னவர் 1961ல் ஜான்.எஃப்.கென்னடி . 

தமிழில் antimetabole என்பதை வார்த்தைகளை திருப்பி போட்டு ஏற்படுத்தும் 'வார்த்தை ஜாலம்' எனலாம். கொஞ்சம் கிட்ட வருகிறது.

'வாழ்வதற்காக உண், உண்பதற்காக வாழாதே' என சாக்ரடிஸ் சொன்னதும் அதே antimetabole தான்.

நம் ஊரில் விசு, டி.ராஜேந்தர் போன்றோர் இதில் விற்பனர்கள்.

இதையே கணிதத்தில் Inverse relationship என்கிறார்கள். 
The semantic value of a sentence A is not the same value of the converse of A.
***

மற்றொரு உதாரணம்.

இதில் செஷாயர் பூனை (Cheshire cat) என்று ஒரு பூனை வருகிறது. சிரித்தபடியே காற்றில் மறைந்து வேடிக்கை காட்டும். செஷாயர் பூனையை நண்பனாக கொள்கிறாள் ஆலிஸ். 'சிரிக்காத பூனைகளைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். இது போலச் சிரிப்பு மட்டுமிருந்து பூனை மறைந்து போய்விடுவதை இப்போதுதான் பார்க்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக ' என்கிறாள் ஆலிஸ்.

சிரிப்பு மட்டுமிருந்து பூனை மறைந்து போய்விடுவதை Deep abstraction of concepts என கணிதத்தில் விளங்கலாம். 
Non-Euclidean geometry, abstract algebra தெரிந்தால் இது சுலபம். 
***

ஜியோமெட்ரியோ, அல்ஜிப்ராவோ விளக்க வரவில்லை. நான் சொல்வது இப்படி கதை நெடுக கிடைக்கும் ஆச்சரியங்களை.

மேலோட்டமாகப் படிக்கும்போது குழந்தைகளுக்காக எழுதபட்ட Fairy tale தான். இதில் Philosophy இருக்கிறது. லூயிகரோல் கணிதம் தெரிந்தவர் என்பதால் அதையும் சேர்த்து எழுதியிருக்கிறார்.  ஒரு Fantasy கதையில் இதையெல்லாம் கலந்து கட்டி அடிச்சிருக்கிறார். 

அதனாலேயே படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஓர் அனுவபம் எற்படுகிறது. குழந்தைகளுக்கு ஒன்று, பெரியவர்களுக்கு மற்றொன்று, கணிதம் தெரிந்தால் வேறாகவும் இருக்கிறது. இப்படி இருப்பது என் வரையில் ஸ்பெஷல்.

இந்நூல், உலகின் தலைசிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பல மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்பட்டுள்ளது (கிட்டதட்ட 174). தமிழில் விஜயா பதிப்பகம், மற்றும் வம்சி புக்ஸ் வெளியீடாக மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருப்பவர் - எஸ்.ராமகிருஷ்ணன்.

விநோத உலகின் அனுபவங்களை, வார்த்தை வசீகரங்களை, கணித நுட்பங்களை உலகிற்கு சொல்லியபடியே இருக்கிறது. இதுவே திரும்ப திரும்ப உலகெங்கும் மக்கள் படிக்க காரணமாகிறது. இதுதான் இந்நூலின் தனி சிறப்பு. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் ஆலிஸின் அற்புத உலகம் திறந்தே இருக்கிறது. 

பின் குறிப்பு: 20-Mar-2014 எழுதிய கட்டுரை, இன்றுதான் நேரம் கிடைத்தது வெளியிட.


"Alice in Wonderland" was a book of that extremely rare kind which will belong to all the generations to come until the language becomes obsolete. 

-by Sir Walter Besant.


Tuesday, August 13, 2013

குட்டி இளவரசன் - பிரெஞ்சு நாவல்



இதுவொரு குட்டி நாவல்.

LEPETIT PRINCE என பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்கள் வெ.ஸ்ரீராம், மதனகல்யாணி. பிரமாதமாக செய்திருக்கிறார்கள். இதுவரை 200 மொழிகளில் வெளியாகி, 14 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. 1943-ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981-ல் 'க்ரியா' பதிப்பித்திருக்கிறது. Braille முறையிலும் வெளியிட்டு இருக்கிறார்கள். Braille முறை என்பது கண் தெரியாதவர்கள் வாசிக்கும் முறையாகும்.

Antoine de Saint-Exupery
குட்டி இளவரசன் நாவலை எழுதியவர் அந்த்வான் து செந்த்-எக்சுபெரி Antoine de Saint-Exupery. 1923-ல் இவர் இராணுவத்தைவிட்டு வெளியே வந்துவிட்டார். எழுதுவதில் ஆர்வம் கொண்டு 1925-ல் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார்.

இவர் ஒரு முறை சகாரா பாலைவனத்தில் விமானக்கோளாறு காரணமாக தரையிறங்கினார். ஒரு நபர் ஓட்டும் விமானம் என்பதால் துணைக்கும் யாருமில்லை. அங்கு மனிதர்கள் இல்லை. கண்ணுக்கெட்டியவரை மணல். தனிமை. பகலிரவாக மணலையும், ஆகாசத்தையும் பார்த்தபடியே கிடந்தார். இவருக்கு துணையாக காற்று மட்டும் வீசிக்கொண்டேயிருந்திருக்கிறது. அந்த நாட்களில் அவர் அடைந்த பயம், கற்பனை, பரவசம் இன்னும் பலவென அவருக்குள் ஆழமான மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

இரண்டாவது உலகப் போரில் 1944-ல் ஜுலை 31-ஆம் தேதி கார்ஸிகாவில் போர்கோ என்ற இடதிலிருந்து விமானத்தில் சென்ற அவருக்கு என்ன ஆயிற்று என்றறிய முடியாதவாறு மறைந்துபோனார். இவர் கதை ஒன்றின் கதாபாத்திரம் போல காணாமலே போனார்.

இவரது இலக்கியச் சேவையை சிறப்பிக்கும் விதமாக பிரெஞ்சு தேசம் ஐம்பது பிராங்க் நோட்டில் அவரது கதையில் வரும் குட்டி இளவரசன் மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது.


இந்த 'குட்டி இளவரசனை' இத்தனை மொழிகளில் உலவவிட்டிருப்பது எது?

கதையில் குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் எளிமையானவை, தத்துவார்த்தமானவை, உலகை எந்த மனத்தடையும் அற்று நெருங்க சொல்பவை. தான் ஒருமுறை கேட்ட கேள்வியை ஒரு போதும் மறக்காத குட்டி இளவரசன் பதில் பெறும்வரை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துவான்.

கதை இப்படி ஆரம்பிக்கிறது - "எனக்கு ஆறு வயதானபோது ஒரு அற்புதமான படத்தைப் பார்த்தேன். மலைபாம்பு காட்டுவிலங்கை விழுங்குவதாக. அதேபோல் யானையை ஒரு மலைபாம்பு விழுங்குவதாக நான் வரைந்தேன். பெரியவர்களுக்கு அது புரியவில்லை. பெரியவர்களுக்கு விளக்கங்கள் தேவையாகயிருக்கிறது. எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்கள் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது."

The Little Prince - குழந்தைகளுக்கான புத்தகம். பெரியவர்களுக்குமான கதை.

இனி சுருக்கம்,-

கதையை சொல்பவராக விமானி. ஒரு நாள் விமானம் பழுதடைந்து தனியாக பாலைவனத்தில் இருக்கிறார். அங்கு ஒரு சிறுவனைக் காண்கிறார். ஆள் நடமாட்டம் ஏதுமில்லாத இந்த இடத்தில் இச்சிறுவன் எப்படி என ஆச்சரியம் படுகிறார். வேறு கிரகத்தில் இருந்து வந்த சிறுவன் என அறிந்து கொள்கிறார். சிறுவன்தான் குட்டி இளவரசன்.

அவன் விமானியிடம் ஓர் ஆட்டுகுட்டியை வரைந்து தர சொல்கிறான். குட்டி இளவரசனுக்கு தனியாக கிரகம் இருகிறது. சிறிய கிரகம். நமது வீட்டைவிட சற்று பெரியது. அவ்வளவுதான் அந்த கிரகம். அங்கு ஒரு ரோஜா செடியிருக்கிறது. பூவோடு பேசுகிறான். குட்டியாக மூன்று எரிமலையிருக்கிறது. தனி ஒருவனாக கிரகத்தில் வாழ்வதால் அந்த கிரகத்தை சுத்தம் செய்வது முதல் சகல வேலைகளையும் அவன் ஒருவனே செய்கிறான்.

ஒரு வேலையைத் தேடிக்கொள்ளவும் அறிவை வளர்த்துக்கொள்ளவும் தன்னைச் சுற்றிய சிறு கிரங்களை நோக்கி அவன் பயணம் செய்கிறான். முதல் கிரகத்தில் அரசன் ஒருவரைச் சந்திக்கிறான். இன்னொன்றில் தற்பெருமைக்காரன், மற்றதில் குடிகாரன், அடுத்த கிரகத்தில் ஒரு 'பிஸினஸ்மேன்', ஐந்தாவதில் தெருவிளக்கு ஏற்றுபவன், ஆறாவதில் பிரமாண்டமான புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கும் புவியியலாளன் - முதியவர் - என வரிசையாக சந்தித்து ஏழாவதாக பூமிக்கு வருக்கிறான்.

பூமியில், பாலைவனத்தில் ஒரு பாம்பைச் சந்திக்கிறான், அதோடு பேசுகிறான். மனிதர்களைத் தேடிச் செல்கிறான். வழியில் ஒரு மலரைச் சந்தித்து அதன் சுகதுக்கங்களைக் கேட்கிறான். பின் நரியை சந்திக்கிறான்.

நரி, அவனிடம் ரகசியம் சொல்கிறது. 'இதயத்திற்கும் பார்வை உண்டு. அது கண்களுக்குத் தென்படாததைப் பார்க்க முடியும்' என்கிறது.

அதனால் நரியோடு நட்பு கொள்கிறான். அதன் பிறகு நமது விமான ஓட்டியைச் சந்தித்து அவனுடன் பழகி நட்பாகிறான். இருவரும் ஒன்றாக பொழுதைக் கழிக்கிறார்கள்.

குட்டி இளவரசன் வானில் உள்ள நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல. அவை கண்ணுக்குத் தெரியாத சிரிப்பு. அதை நீ உணர வேண்டும் என்று கற்றுத் தந்துவிட்டுப் பிரிந்து போய்விடுகிறான். உயிர் பிழைத்து சொந்த ஊருக்கு வந்தபிறகும் குட்டி இளவரசன் நினைவோடு அவன் மறுமுறை வரக்கூடும் என்று ஏக்கத்துடன் விமானி காத்திருப்பதாக முடிகிறது.

இந்த கதையில் குட்டி இளவரசன் மனிதர்களைத் தேடி செல்லும் வழியில் மலரிடம் பேசும் ஒரு பகுதி வருகிறது. இந்த கதையின் எழுத்து நடைக்கு ஒரு சாம்பிள்.
  

குட்டி இளவரசன் மிக நவீனமான ஒரு கதாபாத்திரம். அவனால் எலி, நரி போன்றவற்றை எளிமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனிதர்களை புரிந்துகொள்ள முடியவில்லை.

கதையின் மையமாக நான் கருதும் சம்பவம். விமானிக்கு குட்டி இளவரசன் கற்று கொடுக்கும் 'கண்ணுக்கு தெரியாததைப் பார்க்க முடியும்' என்று சொல்லிக் கொடுப்பதைதான். பெரியவர்களான நமக்கும் குட்டி இளவரசன் சொல்வதும் இதுவே.

இதைப் படிக்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் அலாதியானது. இளவயதில் படித்தால், நடுத்தர வயதில், பெரியவர்கள் படித்தால் என்று படிக்கும் போது கிடைக்கும் அனுபவமும் புரிதலும் முக்கியமானது. இதனாலேயே குட்டி இளவரசன் புத்தகம் வெற்றி பெறுகிறது. மற்றும் இக்கதை கவித்துவத்தோடு சொல்லப்பட்டிருப்பது ஒரு மேலும் ஒரு சிறப்பு.

குட்டி இளவரசன் அழகான சிறுவன். ஒரு மலரைப் பாதுக்காப்பாகக் காப்பற்ற தெரியாத மனிதர்கள் எப்படி பூமியைக் காப்பாற்றுவார்கள் என்று கேட்கிறான். ரோஜாவை வளர்க்க தெரிந்த மனிதனுக்கு அதை புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்கிறான். இயற்கை மனிதர்களுக்கு தந்திருப்பதை மனிதர்கள் எப்படி கண்டுகொள்ளாமல் சிதைக்கிறார்கள் என்பதையே நாவல் விவரிக்கிறது.

சின்ன புத்தகம் - வாசித்துவிடலாம்.

***

உதவியவை:

1. குட்டி இளவரசன், க்ரியா பதிப்பகம். Rs.100/-
2. ரயிலேறிய கிராமம், உயிர்மை பதிப்பகம். Rs.125/-
3. http://www.thehindu.com/news/cities/Madurai/braille-edition-of-french-classic-released/article4580383.ece