Thursday, June 10, 2010

ஜோதிகாவும் குட்டி ஆப்பிளும்



பக்கத்தில் இருக்கும் குழந்தையை யார் என்று தெரியவில்லையென்றால், நீங்கள் தமிழ் சினிமாவை விட்டு வெகு தூரம் தள்ளி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த பாப்பாவுக்கு ஒரு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான்.

ஆம். சூர்யா ஜோதிகாவுக்கு ஒரு மகன் பிறந்ததுதான் இப்போதைய கோடம்பாக்க லேட்டஸ்ட். பத்திரிக்கைகளில் செய்திச் சொல்லி ரசிகர்கள் இனிப்பு கொடுத்தார்கள். பாதகம் யாருக்கும் இல்லை என்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி.
*****

மத நம்பிக்கையிலும், பழமொழியிலும், வரலாற்றிலும் இடம் பெற்ற ஒரு பழம். ஏவாள் முதலில் கடித்து ஆதாமிடம் கொடுத்தது. தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவனை தள்ளி வைக்கலாம் என - நமக்கு வெகுவாக பரிச்சயம் ஆனதுதான். அறிவியல் கண்டுபிடிப்புக்கு உதவியதில் தான் சுவாரஸ்யம்.

நாம் அறிந்திருப்பதைப் போல் புவிஈர்ப்பு விசை தத்துவத்தை கண்டுபிடித்தவர், இங்கிலாந்து விஞ்ஞானி ஐசக் நியூட்டன். அவர் ஓர் ஆப்பிள் மரத்தடியில் படுத்து இருந்தபோது, மரத்தில் இருந்து ஒரு ஆப்பிள் கீழே விழுந்ததை வைத்து இந்தத் தத்துவத்தை கண்டுபிடித்தார்.”மேலே எறியப்படும் எல்லாப் பொருளும், புவிஈர்ப்பு விசை காரணமாக கீழே வந்தே தீரும்” என்றார். அந்த ஆப்பிள் மரத்தை, லண்டனில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

இந்த ஆப்பிள் மரத்தில் இருந்து 4 அங்குல நீளத்துக்கு ஒரு பகுதியை வெட்டி எடுத்து, விண்வெளிக்கு கொண்டு சென்றார்கள். போன மாதத்தின் ஒரு நாளில் நாசா, விண்வெளிக்கு அனுப்பிய அட்லாண்டிஸ் விண்கலத்தில், இந்த மரத்துண்டையும், நியூட்டன் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு 6 விண்வெளி வீரர்கள் சென்றார்கள்.

“விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது என்பதால், அங்கு இந்த மரத்துண்டு கீழே விழாமல் அந்தரத்தில் மிதக்கும். இதனால் விண்வெளியில் நியூட்டனின் ஈர்ப்பு விசை விதி செல்லாது என்பதை அவருடைய ஆப்பிள் வைத்து நிரூபிக்கப்போகிறோம்” என்றார் அதை எடுத்துச் சென்ற விண்வெளி வீரர்.

விண்வெளி பயணத்தை முடித்த பிறகு, அந்த மரத்துண்டும், நியூட்டன் புகைப்படமும், லண்டன் ஆவணக்காப்பகத்தில் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. “நியூட்டன் உயிரோடு இருந்தால்கூட, விண்வெளியில் தனது விதி பொய்யாகும் அதிசயத்தை காண விரும்புவார்” என்று விண்வெளி வீரர்கள் வேடிக்கையாக கூறினார்கள்.

*****

நம்மில் எத்தனை பேர்களுக்கு இந்த விஷயம் தெரியும். இதை பத்திரிக்கைகளும் இங்கு சொல்லவில்லை. சினிமா சார்ந்த செய்திகளே போதும் என்று விட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. நித்தியானந்தாவின் படுக்கையில் கிடைத்த சுவாரஸ்யம் உலக நடப்புகளில் கிடைப்பது இல்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம். விஞ்ஞானத்தை வேப்பங்காய் ஆக நினைக்காமலும், விளையாட்டு சினிமா தாண்டியும் நாம் வர வேண்டிய தூரம் நிறைய.

பின் வரும் ஒர் நாளில் நம் மெயில் பாக்ஸ் நிரப்ப அந்த இரண்டாவது குழந்தையின் ஃபோட்டோ வரலாம். அப்போது நான் சொன்ன விஷயம் மறந்திருக்கும்.

அதனால் என்ன இப்போ?

.