Friday, April 29, 2016

சிறிது வெளிச்சம்

"நம்பிக்கைதான் வெளிச்சம்"


எங்கள் பக்கத்து வீட்டு குழந்தை, இரண்டரை வயது. தனக்கு காயமேற்பட்டதால் வலியிருப்பதாகவும் புண்ணைப் பார்க்கும்படியும் சொன்னாள். குண்டூசி அளவு புண்ணில் பொக்கு கட்டியிருந்தது. மிகவும் சிறியது. அதைப் பற்றி விஸ்தாரமாகச் சொன்னாள். பார்த்து, ஒன்றுமில்லையென ஊதிவிட்டு ஆறிவிடும் என்று சொன்னதும் சரி என ஒப்புக்கொண்டாள்.

சிறியவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் கவனித்து விடுகிறார்கள். எதைப் பற்றியும் அறியும் ஆவலோடு இருக்கிறார்கள். என் பக்கத்து வீட்டு குழந்தைமட்டுமல்ல எல்லா குழந்தைகளும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்.

பட்டாம்பூச்சி பிடிப்பது, ஓடி விளையாடுவது, தெரிந்துகொள்ளும் பொருட்டு எதையும் கேள்வி கேட்பது, அவர்களின் மன இயல்பாக இருக்கிறது. நாம்தாம் புரிந்து கொள்ளாமல் அதட்டி அடக்கிவிடுகிறோம். பெரியவர்களாக நடந்து கொள்கிறோம். அவர்களை அப்படி நடக்கச் சொல்லி பழக்குகிறோம், கட்டாயப்படுத்துகிறோம்.

சின்ன சின்ன விஷயங்களை சிறியவர்களுக்கானது என முடிவு செய்துவிடுகிறோம். ஆனால் இப்படி சிறியது என பெரியவர்கள் மறந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு தொடர் கட்டுரையாக எழுதி தொகுத்த நூல்தான் 'சிறிது வெளிச்சம்'.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இந்த கட்டுரைகளை புத்தகமாக - விகடன் வெளியீடாக வந்திருப்பது நம்மில் பலர் அறிந்தது. இதை முழுவதுமாக இப்போதுதான் படித்து முடித்தேன். ஒரு சில கட்டுரைகளை அது வெளிவரும் காலங்களில் படித்திருக்கிறேன்.

உண்மையில் நம்மை சுற்றி பகலிலும் கண்டு கொள்ளபடாத எத்தனையோ சம்பவங்கள், நிகழ்வுகள், மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது சிறிது வெளிச்சமாவது பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்கிறார் எஸ்.ரா.

வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும், அன்றாட வேலைப்பளுவினால் தங்களைச் சூழ்ந்துள்ள மனிதர்களை விட்டு விலகி எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என கோர்வையாகச் சொல்லி செல்கிறார். நாம் கவனத்தில் கொள்ளாதவைகளின் நினைவு தொகுப்பு இந்த நூல்.

இதில் மொத்தம் 58 விசயங்களை நம்மோடு பேசுகிறார். ஒவ்வொன்றை பற்றி சொல்லும் போதும், தகுந்த ஒரு சிறுகதை, திரைப்படம் மூலம் அவரது தனித்துவமான நடையில் விளக்கியுள்ளார்.


***
நம்மில் எத்தனைப் பேர் கடைசியாக கடிதம் எழுதியது? இதற்கு நினவுகளின் அடுக்குகளில் இருந்து தேடித்தான் பெரும்பாலானவர்கள் பதில் சொல்வார்கள். நாளைக்கு என்ன கிழமை என்பது போல சுலபமாக பதில் சொல்ல முடிவதில்லை. விஞ்ஞானமும் செல்போனுமாக வளர்ந்துவிட்ட காலத்தில் யாரும் யாருக்கும் கடிதம் எழுதுவதில்லை. இங்கு கடிதம் எழுதுவதில்லை என்பது புகார் அல்ல. அதை நாம் மறந்துகொண்டே வருகிறோம்.



"கடிதம் என்பது வெறும் பரிமாற்றம் மட்டுமல்ல. அது நாம் இன்னொருவரை நேசிக்கிறோம் என்பதன் சாட்சி. ஒருவகையில் கடிதம் நம் மனதின் குரல். நேரில் சொல்ல முடியாத தவிப்பைக் கடிதம் சொல்லிவிடும். கண்ணீர்க்கறை படிந்த கடிதங்களும், பிரிவின் அழியாத மணமுள்ள கடிதங்கள், தற்கொலை செய்து கொண்டவனின் கடிதங்கள், முதல் காதலை சொன்னக் கடிதங்கள்... " என பட்டியலிட்டு சொல்கிறார். உறவுகள் சுருங்கிவிட்ட சூழலில் குறுஞ்செய்தி போதுமானதாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ஊடகங்கள் விலாவரியாக விளக்கி சொல்கிறன. மிதமிஞ்சிய செய்திகள், தகவல்களால் சலிப்பாகிறது.

எப்போதும் அழ பழகிய நமக்கு உணர்வுகளை கடத்த இருந்த வழிகளை ஒவ்வொன்றாக
அடைத்துவிட்டு வெறுமனே மறுபடியும் அழுகிறோம். நமது கலைகளைப் போல காரணமேயில்லாமல் இப்பழக்கத்தை கைவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

அடுத்தவரைப் பற்றி அக்கறைப் படுகிறவர்களால் மட்டுமே கடிதம் எழுத முடியும். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'மனைவியின் கடிதம்' சிறுகதை உதாரணமாக தருகிறார். சிறந்த கதை. மேலும் இரானியத் திரைப்படத்தின் (Poet of the wastes) கதையையும் சொல்கிறார். தபால் அட்டையோ, மின்னஞ்சலோ எதுவாயினும் உங்கள் அக்கறைகளை அடுத்தவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்பதில் உண்மையிருக்கிறது.


***
இப்படியாக.... கதை சொல்ல வேண்டிய அவசியம், வால் இல்லாத நாயின் பின்னணி, குடும்ப விரிசலுக்கான காரணம், அக்கறை, பரஸ்பர அன்பு, நமது முட்டாள்தனங்கள் அபத்தங்கள், புகைப்படத்தை பற்றி, குழந்தையிடம் காட்டும் பேதம், புத்தகங்கள் மீதான ஏளனம், விமான பயணம், இளைஞர்களின் அக்கறையை, வீட்டைவிட்டு ஓடிவந்த சிறுவர்களை, கயிற்றின் மீது நடப்பவர்கள், சாலையில் செத்துகிடக்கும் தவளை என நம் அவசர யுகத்தின் கவனிக்க தவறிய பட்டியல் நீள்கிறது.

இக்கட்டுரைகளின் ஒன்றில் ஒரு கேள்வி வருகிறது, 'உலகில் அதிகம் புரிந்துகொள்ளப்படாமல் போவது எது? – என்பதே அது. யோசிக்க வைக்கும் கேள்வி. இதற்கான பதில் தெரிந்ததும் இன்னும் இன்னும் யோசிக்க வைக்கும். 

எது அதிர்ஷ்டம், எதுவெல்லாம் துரதிர்ஷ்டம் என சுவாரஸ்ய பட்டியலில் ஒரு கட்டுரையிருக்கிறது. ஒட்டகத்தின் கண்ணீர், வீட்டின் இதயத்துடிப்பை கேட்டதுண்டா?, வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? பல்லினா பயமா?, புல்லின் நிழலில் இளைப்பாறுங்கள், உடைகள் பேசும் உண்மை, பெண்ணின் உயரம் பெரும் துயரம், உங்களை இயக்கும் சக்தி.... இன்னும், இன்னும்... இதில், எதை விடுவது?

அன்றாட வாழ்வின் கூண்டுகளைத் தாண்டி சற்று பறந்து பாருங்கள் என்கிறார். இப்பத்திகள் சொல்லும் விஷயங்கள் எளிமையானவை. புரிந்துகொள்ளக் கூடியவை. எல்லா கட்டுரைகளிலும் இருக்கும் பொது அம்சமென நான் கருதுவது எழுத்து வசீகரம். 

All you need is love, nothing more. இதுதான் இப்புத்தகம் சொல்லும் மையம். அடுத்தவர் மேல் அன்பு பாராட்ட வழியுறுத்தும் கட்டுரைகள். நம் காலகட்டதிலும், பின் வரும் காலத்திலும், மானுடத்திற்கு தேவையானது அன்புதானே. வேறென்ன இருக்கமுடியும் ?

 

***
இவரது எழுத்தில் ஒர் ஈர்ப்பு வாசனையிருக்கிறது எனத் தோன்றுகிறது. எழுத்தில் வாசனை சேர்க்கும் ரசவாதி. "சொற்களுக்கும் வாசனை இருக்கிறது. அது எப்போதோ, யார் கவிதையிலோ, அரிதாக மனம் நழுவும் தருணங்களில் உணரப்படுகிறது" என ஒரு வரி சொல்கிறார். உண்மை! நீங்கள் முழுவதும் படிக்கும்போது ஓர் இடத்திலேனும் நான் கூறும் வாசமறிவீர்கள். மழை தூறத் துவங்கியதும் மண் புரளும் வாசம் போல.

என்னைக் கேட்டால், இதில் 58 வாசனை இருக்கிறது என்பேன்.

Monday, March 28, 2016

முயலும் கேள்வி - Alice in Wonderland



"ஆற்றின் கரையில் எதுவும் செய்யாமல் வெறுமனே சகோதரியோடு உட்கார்ந்திருப்பது ஆலிஸிற்கு சோர்வு தருவதாக இருந்தது. ஒன்றிரண்டு முறை சகோதரி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எட்டிப் பார்த்தாள். அதில் படங்களோ, உரையாடல்களோ இல்லை. படங்களும் உரையாடல்களும் இல்லாத புத்தகத்தால் என்ன பிரயோஜனம் என ஆலிஸ் யோசித்தாள்".

நீங்க நினைப்பது சரி. இவள் அதே ஆலிஸ்தான்.


'ஆலிஸின் அற்புத உலகம்' Alice in Wonderland கதை இப்படிதான் ஆரம்பிக்கறது. படிக்கும் பழக்கம் ஏற்படும் ஆரம்பங்களில் எல்லா சிறார்களுக்கும் தோன்றும் கேள்வி - படங்களோ, உரையாடல்களோ இல்லாத புத்தகத்தை இந்த பெரியவர்கள் எப்படி படிக்கிறார்கள்? அதில் என்ன இருக்கும்? - என்பதாக இருக்கிறது.

முயல் வளையில் விழுந்துவிடும் ஆலிஸின் பதட்டத்திலிருந்து கதை விரிகிறது. ஆலிஸின் உலகம் வியப்பும் மர்மமும் நிறைந்த ஒரு மாயக்கனவு. கணித மேதையான லூயிகரோல் 1865ல் குழந்தைகளுக்காக எழுதிய இந்த நாவல் ஒரு ஆச்சரியம் ! கணிதத்தில் பெரும் ஆர்வம் கொண்ட லூயிகரோல் தீர்க்க முடியாத புதிர்கணிதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இக்கதையில் கணிதத்தின் பல சூட்சுமங்களும் தேர்ந்த உரையாடல்களும் வியப்பாக இருக்கிறது.


இந்த உரையாடலை கேளுங்கள்:

ஆலிஸ் "இவர்களோடு சற்று விளையாடலாம்" என நினைத்துக்கொண்டு, சொன்னாள்: "வாருங்கள் நாம் விளையாடலாம். நான் உங்களிடம் சில விடுகதைகள் போடுவேன். நீங்கள் விடை சொல்ல வேண்டும்"

"உனக்கு பதில் தெரியுமா ?" என முயல் கேட்டது.

"நிச்சயமாகத் தெரியும்"

"அப்படியானால் அது எதற்கு ?" முயல் தொடர்ந்து கேட்டது. ஆலிஸ் அவசரமாக பதில் சொன்னாள்.

"குறைந்தபட்சம் நான் சொல்வது உங்களுக்கு தெரிந்த அதே புதிர்தான்"

தொப்பிக்காரன் சொன்னான்: "அது அப்படியல்ல. நீ இப்படியும் சொல்லலாம். நான் தின்பதைப் பார்க்கிறேன். நான் பார்ப்பதைத் தின்கிறேன். இரண்டுமே ஒன்று என்று".

இந்த உரையாடலில் என்ன விஷேசம்..? இது ஆண்டிமெட்டபோல் - antimetabole. வார்த்தைகளை திருப்பி போடுவதால் உருவாகும் ஒருவித வாக்கிய கட்டமைப்பு. கொஞ்சம் விளக்குகிறேன்.

எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் சொல்லுவார், 'நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நாட்டிற்காக நீ என்ன செய்தாய் என கேள்?' என்பார். உண்மையாக இதை சொன்னவர் 1961ல் ஜான்.எஃப்.கென்னடி . 

தமிழில் antimetabole என்பதை வார்த்தைகளை திருப்பி போட்டு ஏற்படுத்தும் 'வார்த்தை ஜாலம்' எனலாம். கொஞ்சம் கிட்ட வருகிறது.

'வாழ்வதற்காக உண், உண்பதற்காக வாழாதே' என சாக்ரடிஸ் சொன்னதும் அதே antimetabole தான்.

நம் ஊரில் விசு, டி.ராஜேந்தர் போன்றோர் இதில் விற்பனர்கள்.

இதையே கணிதத்தில் Inverse relationship என்கிறார்கள். 
The semantic value of a sentence A is not the same value of the converse of A.
***

மற்றொரு உதாரணம்.

இதில் செஷாயர் பூனை (Cheshire cat) என்று ஒரு பூனை வருகிறது. சிரித்தபடியே காற்றில் மறைந்து வேடிக்கை காட்டும். செஷாயர் பூனையை நண்பனாக கொள்கிறாள் ஆலிஸ். 'சிரிக்காத பூனைகளைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். இது போலச் சிரிப்பு மட்டுமிருந்து பூனை மறைந்து போய்விடுவதை இப்போதுதான் பார்க்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக ' என்கிறாள் ஆலிஸ்.

சிரிப்பு மட்டுமிருந்து பூனை மறைந்து போய்விடுவதை Deep abstraction of concepts என கணிதத்தில் விளங்கலாம். 
Non-Euclidean geometry, abstract algebra தெரிந்தால் இது சுலபம். 
***

ஜியோமெட்ரியோ, அல்ஜிப்ராவோ விளக்க வரவில்லை. நான் சொல்வது இப்படி கதை நெடுக கிடைக்கும் ஆச்சரியங்களை.

மேலோட்டமாகப் படிக்கும்போது குழந்தைகளுக்காக எழுதபட்ட Fairy tale தான். இதில் Philosophy இருக்கிறது. லூயிகரோல் கணிதம் தெரிந்தவர் என்பதால் அதையும் சேர்த்து எழுதியிருக்கிறார்.  ஒரு Fantasy கதையில் இதையெல்லாம் கலந்து கட்டி அடிச்சிருக்கிறார். 

அதனாலேயே படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஓர் அனுவபம் எற்படுகிறது. குழந்தைகளுக்கு ஒன்று, பெரியவர்களுக்கு மற்றொன்று, கணிதம் தெரிந்தால் வேறாகவும் இருக்கிறது. இப்படி இருப்பது என் வரையில் ஸ்பெஷல்.

இந்நூல், உலகின் தலைசிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பல மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்பட்டுள்ளது (கிட்டதட்ட 174). தமிழில் விஜயா பதிப்பகம், மற்றும் வம்சி புக்ஸ் வெளியீடாக மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருப்பவர் - எஸ்.ராமகிருஷ்ணன்.

விநோத உலகின் அனுபவங்களை, வார்த்தை வசீகரங்களை, கணித நுட்பங்களை உலகிற்கு சொல்லியபடியே இருக்கிறது. இதுவே திரும்ப திரும்ப உலகெங்கும் மக்கள் படிக்க காரணமாகிறது. இதுதான் இந்நூலின் தனி சிறப்பு. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் ஆலிஸின் அற்புத உலகம் திறந்தே இருக்கிறது. 

பின் குறிப்பு: 20-Mar-2014 எழுதிய கட்டுரை, இன்றுதான் நேரம் கிடைத்தது வெளியிட.


"Alice in Wonderland" was a book of that extremely rare kind which will belong to all the generations to come until the language becomes obsolete. 

-by Sir Walter Besant.