Monday, July 12, 2010

சொல்லியிருக்கலாம்...சொல்லிவிட்டேன்!


நான் அரை மூச்சாய் [இன்னும் முழு மூச்சாய் ஆரம்பிக்கவில்லை] புத்தகம் படிக்க ஆரம்பித்ததே 2 வருடங்களுக்கு முன் தான். அதற்கு முன் குமுதம், விகடன், அதுவும் எப்போதாவது கையில் மாட்டும் போது. 5 வருடம் கல்லூரியில் கழித்தேன். அந்த மாலை நேரங்களை என்ன செய்தேன் என்று இன்று கவலைப் படுகிறேன். அப்போவே ஒழுங்காய் படித்திருந்தால் இன்னைக்கு தில்லா…  -பிரதீப் குமார் (வலைப் பதிவர்)

மேலே சொன்ன 'பிரதீப் குமார்' என்ற பெயருக்குப் பதிலாக நம்மில் பல பெயரை போட்டுக் கொள்ளலாம். மேலே சொன்ன வாசகம் அவரது பதிவொன்றில் சொன்னது.

நபருக்கு நபர் வருடமும், சூழலலும் மாறுபடலாம். ஆதாரமான அந்த 'அடடா' நம் எல்லோருக்கும் பொது!.

அடடா... நாம் செய்யாமல் விட்டு விட்டோமே,  கொஞ்சம் யோசிச்சிருக்கலாம், அடடா... அப்படி பண்ணியிருக்கலாம் - என அந்த 'அங்கலாய்ப்பு' அனுபவம் நிச்சயம் நம்மில் இருக்கிறது. விதி விலக்கில்லாமல்.

*****

நான் கொஞ்சமே கொஞ்சம் போல் படிக்கும் காலத்தில் (பாடம் தவிர்த்து) படிக்காமல் போனேனே என்று அங்கலாய்க்க அவசியமில்லாமல் தேடித் தேடிப் படித்திருக்கிறேன். செமஸ்டர் நடக்கும் இடையில், இரவில் படித்திருக்கிறேன்.(கல்கியின் சிவகாமியின் சபதம்). பஸ் பயணங்களில், இரயில் பயணங்களில், காத்திருக்கும் வேளைகளில், ஏன் ஊருக்கு போய் பாட்டியை பார்க்கும் வேளைகளில் என விவஸ்த்தையில்லாமல், நேரங்காலம் பார்க்காமல் படித்திருக்கிறேன். கல்கி, சாண்டில்யன், லா.ச.ர, மௌனி, ஜி.நாகராஜன், நா.பிச்சமூர்த்தி, கலைஞர் மு.கருணாநிதி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, அனுராத ரமணன், சுபா, ராஜேஷ்குமார், பி.கே.பி, கண்ணதாசன், வைரமுத்து, வாலி என நீளும் பட்டியலின் எழுத்துகளை வெகு அருகில் வைத்து ரசித்திருக்கிறேன். உறவாடியிருக்கிறேன்.

வகை என பிரிக்காமல் சொன்னதைப் படித்தேன். மனம் போனபோக்கில் புத்தகங்களை தேர்ந்தெடுப்பேன். இன்னது என பாகுபடுத்தாத 'பொது' பிரிவிலேயே இருந்திருக்கிறேன்.

உலக சினிமாக்களை மாதம் ஒரு முறை போட்டுக் காட்டுவார்கள். சந்தாதாரர் ஆக ரூபாய் 50 அல்லது 60 வசூலிப்பார்கள். சந்தா கட்டி உறுப்பினர் ஆகி படம் பார்த்திருக்கிறேன். படம் முடிந்தவுடன் அதைப் பற்றி விவாதிப்பார்கள். படம் பார்த்து அவர்கள் சொல்லும் கருத்தையே என் கருத்தாக எடுத்துக் கொண்டு வெளி வருவேன். படம் பார்த்து புரியாத எனக்கு அவர்கள் விவாதிக்கும் விஷயமும் பாதிதான் விளங்கும். அப்புறம் நான் எங்கு அந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்வது!. இதெல்லாம் 2003 முந்தைய திருச்சியில். நான் பார்த்த தமிழ் படங்கள், ஊர் சுற்றும் என் ஆர்வம், நண்பர்கள் எல்லாம் புத்தகம் படிக்கும் ஆசைக்கு சமமாகவே இருந்ததால், நான் ஒரேயடியாக புத்தக புழுவாகவும் ஆகவில்லை. எதைதான் உருப்படியாகச் செய்தேன்?!.

அந்த சமயத்தில் நான் செய்து பார்க்க துணியாதது 'காதல்' மட்டுமே. பெண்களை கண்ணில் பார்பதோடு சரி... அதற்கும் காரணம் இருந்தது. எந்த பெண்ணும் என்னை 'மோகித்து' காத்திருக்கவில்லை. ஆத்து நீச்சல் (சுமாராக!) மட்டும் தெரிந்த எனக்கு 'காதல்' கடலில் குதிக்கும் தைரியமும் வாய்த்திருக்கவில்லை. நான் பார்த்த பெண்களுக்கு பின்புலமும் கூடவே சகோதரனும் இருந்ததால் என் 'உடல் பத்திரம்' கருதி வாளாவி இருந்து விட்டேன். என்னுடன் தவறி பழகியவர்களும் சகோதர பாசத்தைக் காட்டியவர்கள். இதில் என் நல்ல நண்பர்களை சேர்க்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று சிலரிடம் சிரித்து மட்டும் வைத்திருந்தேன். 'ஃபிக்செட் டெபாஸிட்'!. என் டெபாஸிடை களவாடிய 'களவாணி'களே அதிகம். தீராத வேலைக்கிடையில் செமஸ்டர் அறிவித்து, புண்ணியம் கட்டிக் கொண்ட பல்கலை கழகத்தின் நிர்வாகத்திற்கு என் 'காதல்' தேவை புரியவில்லை. ச்சே.... ?! என் பார்டர் தாண்டாத காதலும் தேறவில்லை. அதனால், பெண்களை பார்பதோடு சரி!

இதனால் எல்லாம் என் பாட படிப்பு தனியாக பாதித்தாக சொல்ல முடியவில்லை. ஒழுங்காகவே பாஸ் செய்து வெளிவந்தேன். (பட்ட கஷ்டம் நமக்குதான் தெரியும்!.)
*****

அந்த காலகட்டத்தில்தான், நான் முதன் முதல் படித்த முழு மொழிபெயர்ப்பு நாவல் 'பட்டாம்பூச்சி'.

ட்டாம்பூச்சி - ஹேன்றி ஷாரியர் எழுதிய Papillon என்னும் பிரெஞ்சு நூலின் ஆங்கிலம் வழியான தமிழ் மொழிபெயர்ப்பு. 800 பக்கங்களைத் தாண்டும் இந் நூல். மயிர்கூச்செறிதல் என்று சொல்வார்களே - அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன்.

நூலின் ஆசிரியர் தனது இருபத்தைந்தாவது வயதில் கொலைக் குற்றமொன்றிற்காக ( செய்யாத கொலையென்கிறார் ) ஆயுட் தண்டனை பெற்று அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, பிரெஞ்சுக் கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப் படுகிறார்.

அவர் ஒவ்வொரு சிறையாகத் தப்பிப்பதும், பிடிபடுவதும், அடைபடுவதுமாக 13 வருட காலத்தை, அவர் தனது விடுதலை மீதான இலக்கில் மீண்டும் மீண்டும் செலவிடுகிறார். கொடிய தீவுச் சிறைகளில் இருந்து புதைமணலிலும், ஒட்டைக்கட்டுமரங்களிலும் தப்பிப்பதுவும், மீண்டும் அகப்பட்டு இருண்ட தனிமைச்சிறைகளில் அடைக்கப்படுவதும், அதிலிருந்து வெளியேற தொடர்ந்து முயற்சிப்பதுமாக விரிகிறது கதை.

தமிழின் மிகச் சிறந்த மொழி பெயர்ப்பு நூலாகக் இதைக் சொல்லலாம். Must read வரிசையில் இந்த புத்தகத்திற்கு என்றும் இடமுண்டு. பெரும்பாலான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கதை ஓர் உண்மை சம்பவம்!. உலக புகழ் பெற இது மட்டும் காரணம் அல்ல. மனிதனின் சுதந்ததிர வேட்கை உலக பொது!. மனிதனின் அந்த சுய விருப்ப 'விடுதலை'. நான் யாருக்கும் அடிபணிய தேவையில்லை என்ற உற்சாகம். அந்த உணர்வு கொடுக்கும் உற்சாகமே! இதை உலக இலக்கியத்தில், உலக மக்களிடம் புகழ் பெற காரணம்.

தமிழில் பெயர்த்தவர் ரா.கி.ரங்கராஜன். ( 'சிவாஜி' பட சூட்டிங்கில் ரஜினிகாந்திற்கு நடிகர் விவேக் பரிசளித்தது இந்த நூலைத்தான்! )

ரா.கி. ரங்கராஜன்: 05.10.1927 ல் கும்பகோணத்தில் பிறந்தார். தன் 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புகள் சின்னத்திரையிலும் இடம்பெற்றுள்ளன. எழுத்துலகின் மேதாவி, பிஷ்மர் என்று போற்றபடுபவர்.

இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள், வரும் அடுத்த புத்தக கண்காட்சியில் வாங்கிப் படியுங்கள். குறித்து வைத்துக் கொள்ளலாம். அவசரப்படுபவர்கள் இப்போதே தேடி, ஆரம்பிக்கலாம்.
இது படமாகவும் வந்திருக்கிறது. அதன் ட்ரைலர்.




"ஓசைப்படாமல் சாதனை படைத்த தமிழர்களில் ஒருவரான எனது இனிய நண்பர். ரா.கி. ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம், வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு - இவை இவருடைய சிறப்புகள்"

- சுஜாதா

நீங்களும் உங்கள் நண்பர்களிடம் இந்த பத்தியின் தலைப்பைச் சொல்லி பேச்சை ஆரம்பித்து விடுங்கள்.

அடடா... இதை முன்பே சொல்லியிருக்க வேண்டுமோ!

Saturday, July 10, 2010

செம்மொழி மாநாடு - நம் பார்வை II


செம்மொழி மாநாட்டு ஆரவாரமெல்லாம் முடிந்து, தமிழர்கள் தத்தமது வேலைகளில் இறங்கிவிட்டனர். ஆட்சியாளர்கள் கட்சி பணி பார்க்கவும், நாமெல்லாம் மற்றுமொரு உலக கோப்பையை பார்க்க - ஆக்டோபஸ்ஸின் உதவியோடு - நகம் கடித்து துப்ப தொடங்கியிருக்கிறோம்.

களிமண், கல்வெட்டு, ஓலை, காகிதம் தாண்டி கணினியிலும் பட்டொளி வீசிப் பறக்கும் தமிழ்க் கொடியை இன்னும் உயரே தூக்கிப் பிடிக்கும் நோக்கில், செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது!பேசும் மொழிக்காக இத்தனை லட்சம் பேர் கூடுவார்கள் என்ற ஒன்றே கோவை மாநாட்டுக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமை.

கொஞ்சம் அருகில் சென்று, நுரை தள்ளி தண்ணீர் அள்ளி பார்ப்போம்.

*****

மொழியியல் சார்ந்த உலக மேதைகளும் உள்ளூர் அறிஞர்களும் ஒன்றாகச் சேர்ந்து தங்களது ஆய்வு முடிவுகளை, இது வரை இருக்கும் ஆதாரங்களை நினைவுபடுத்துவதும், அடுத்த கட்டமாகத் தங்களது ஆய்வை எதை நோக்கிச் செலுத்துவது என்று முடிவு எடுக்கவுமே ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கோவையில் நடந்த ஆய்வரங்குகள் இதில் எந்த நோக்கத்தையும் நிறைவு செய்ததாகத் தெரியவில்லை.

ஆய்வரங்க நிகழ்வுகளில் கருணாநிதி பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்கூட யாரையும் நெருட வில்லை. அவர் மகள் கனிமொழி பற்றியும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில்... தமிழறிஞர்களுக்கு முகச்சுளிப்பு!

கனிமொழி பற்றி மூன்று தலைப்புகளில்! அந்தக் கட்டுரைகளின் பொருளடக்கமும் சரி... சமர்ப்பித்தவர்களின் விஷயஞானமும் சரி... அந்த அரங்கத்திலேயே காற்று இறங்கிப் போனது இன்னும் சோகம்! நல்ல வேளை பொது மக்களை பார்க்க அனுமதிக்கவில்லை (!).

ஒர் உதாரணம் பார்ப்போம்.

'கவிஞர் கனிமொழியின் கவிதைகளில் பெண் மன உணர்வுச் சித்திரிப்பு' என்ற தலைப்பில் வெ.கலைச்செல்வி என்பவர் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அங்கீகரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கேள்வியாளர்கள் மொத்தமே 10 பேர்தான் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து, 'கனிமொழி எத்தனை கவிதைத் தொகுப்புகள் எழுதி இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என முதல் கேள்வியைப் போட்டார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் கொஞ்சம் நேரம் தயங்கி, எதையோ யோசித்த போஸில் நின்றார் கலைச்செல்வி.கேள்வி கேட்டவரே கனிமொழி எழுதிய மூன்று புத்தங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ''அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் எப்படி ஆய்வுக் கட்டுரை எழுதினீர்கள்?' என்று மடக்கினார்.

''நான் 'கருவறை வாசனை' பற்றி மட்டும்தான் ஆய்வு செய்தேன்!' என்று சமாளித்தார் கலைச்செல்வி. இதில் சமாதானம் அடையாத கேள்வியாளர், 'ஆய்வு என்பது சம்பந்தப்பட்டவருடைய எல்லா எழுத்துகளையும் படித்துவிட்டு அவற்றில் இருந்து நீங்கள் அறிந்துகொண்டதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, பொத்தாம் பொதுவான கட்டுரையாக இருக்கக்கூடாது!' எனச் சொல்ல, கலைச்செல்வியின் முகம் இருண்டது.

*****
பெ.பகவத் கீதா 'கனிமொழியும் கவிதைமொழியும்' என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வைத்தார். இந்த ஆய்வுக்கும் சரமாரி கேள்விகள்! முதலில் எழுந்த ஒரு கேள்வியாளர், 'கருவறையின் வாசத்தை ஆண்கள் உணர்ந்தது இல்லையா? ஆண்களைப்பற்றியும் கனிமொழி எழுதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 'சிகரங்களில் உறைகிறது காலம்' என்ற புத்தகத்தில் தந்தையரைப் பற்றியும் அவர் பாடி இருக்கிறாரே..?' என்று அடுக்கிக்கொண்டே போனார் கேள்விகளை. பகவத்கீதா, 'நான் பெண்மை தொடர்பான விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அவ்வளவுதான்!' என்றார். அடுத்து பழனிசாமி என்பவர் எழுந்து, 'உங்கள் ஆய்வுக் கட்டுரை முழுக்கப் பாராட்டு மழையாக அல்லவா இருக்கிறது. நடுநிலையான விமர்சனம் எதுவும் இல்லையே? கனிமொழியின் படைப்புகளில் இருக்கும் முரண்பாடுகள் பற்றி நீங்கள் எதையும் குறிப்பிடவில்லையே... ஏன்?' என ஒன்றுக்குள் ஒன்றாகப் பல கேள்விகளை அடுக்க, 'அவையடக்கத்தின் காரணமாக, அதுபற்றி எல்லாம் ஆய்வு செய்யவில்லை!' என்று பகவத்கீதா பதில் சொன்னாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு அரங்கமே ஒரு நிமிடம் அமைதி காக்க, 'ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கும் அவையடக் கத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே புரியவில்லையே?'' என்று இன்னொரு கேள்வியாளர் அரங்கத்தின் அமைதியைக் கலைத்தார். தொடர்ந்து அவரே, ''எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய நன்மை - தீமையை அலசி ஆராய்ந்து சொல்வதுதான் ஆய்வுக் கட்டுரை! ஒருவரைப் பாராட்டி எழுதுவது ஆய்வுக் கட்டுரையே இல்லை. அதை வெறும் கட்டுரை என்றுதான் சொல்ல முடியும்!' என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினார். நல்ல வேளை இந்தக் கேள்விக்கு பகவத்கீதா பதில் சொல்ல அரங்கத் தலைவர் கனல்மைந்தன் அனுமதிக்கவில்லை. காரணம் நேரமின்மைதான்! (ஜு.வி யில் (04-07-2010) விரிவாக வந்திருக்கிறது.)

*****
கிளம்பிற்றுகாண் ஜால்ரா கூட்டம்!

என விகடன் கொட்டு வைக்கும் அளவுக்கு சத்தம் அதிகம்.

அதே கவிஞர்கள், அதே கூட்டம் சூழ்ந்திருக்க, நடுநாயகமாக வீற்றிருக்கிறார் முதல்வர். 'யாரங்கே... தொடங்கட்டும்' என ஆரம்பமாகிறது கவியரங்கம்...

"கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களைவிட, ஈரப் பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால், கோபாலபுரம் வீட்டை கொடையாகத் தர முடியுமா?, அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால், அதியமான் ஏமாந்திருப்பான்!" என்றெல்லாம் கவிதை மழை. சொன்னது ஈரோடு தமிழன்பன்.

வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்கள் மேல் நமக்கு தனிபட்ட பகையில்லை. கேட்பவர்களுக்கும் சில வேளை கூச்சம் வரலாம் என்பதே நமது கருத்து! வேறென்ன சொல்ல?

*****
கண்காட்சிக்கு ஜெ !

அந்த அரங்கத்துக்குள் நுழைந்தால், சிந்துச் சமவெளிக்குள் பயணிப்பதுபோலவே இருந்தது. மொகஞ்சதாரோ - ஹரப்பா நாகரிங்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் இருந்த எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களே என்று நிரூபிக்கப்பட்டதால், அந்த எழுத்துக்களில் தொடங்கி, அங்கே இருந்த வீடுகள், கிணறுகள், அம்மக்கள் பயன்படுத்திய பொருட்களின் சிதைவுகளை மாதிரியாகச் செய்துவைத்து இருந்தார்கள். ஓலைச் சுவடிகளை ஊர் ஊராக அலைந்து திரிந்து கைப்பற்றி புத்தகங்களாகப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதய்யர். அவர் வைத்து இருந்த திருக்குறள், புறநானூறு, சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களின் ஓலைச் சுவடிகள், அதை எழுதப் பயன்படுத்திய எழுத்தாணிகள் வைக்கப்பட்டு இருந்தன. புராதனச் சிலைகள், தமிழர் வாழ்க்கையைக் காட்டும் ஓவியங்கள், பழைய காலத்துத் தமிழ் எழுத்துக்கள் என எல்லாமே பழமையை நினைவுபடுத்துவதாக இருந்தன. இலக்கியக் காட்சிகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட 3டி அனிமேஷன் காட்சிகள்கொண்ட ஒலி - ஒளி கண்காட்சி அரங்கம் அருமை! (கண்காட்சி வருணனை - ஆ.வி., நன்றி)

அறுதலான விஷயம், 'தமிழிலேயே பாடம் படித்தால், தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை'. அச்சுத் துறையில் கணினித் தமிழை உலகளாவ ஒருமுகப்படுத்தும் விதமாக, 'யூனிகோட்' மற்றும் 'டிஏசிஇ-16' ஆகியவற்றை ஆரத் தழுவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் அனைவரும் ஒரே எழுத்துருவில் படிக்கலாம் இனி!

 'டிஏசிஇ-16' புரியாதவர்களுக்கு வேறொரு சந்தர்பத்தில் சொல்கிறேன்.

*****
தமிழுக்கு இவை மட்டும் போதுமா? இன்னும் செல்வதற்கும் செய்வதற்கும் எவ்வளவோ இருக்கின்றன!

யானைக்கு சோள பொரி. என்ன! இந்த பொரி அவிக்க, 380 சொச்சம் கோடி தேவைப் பட்டிருக்கிறது!