Thursday, November 13, 2014

'வெண்முரசு' விழா


ஜெயஸ்ரீயிடம் மட்டும் சொல்லியிருந்தேன். 

அம்மா, அப்பா, மஹதி, ஜெயஸ்ரீ அழைத்துக்கொண்டேன். எங்கே செல்கிறோம் என்பதை சொல்லவில்லை. ஜெயமோகனின் 'வெண்முரசு' நாவல் வெளியீட்டு விழா என்பது அவர்களுக்கு புதுமையாக இருக்கும். இது இலக்கியம் சார்ந்த நிகழ்வு என்பதால் ஒத்துழைப்பு எப்படி இருக்குமோ? கிளம்பி பாதி வழியில்தான் சொன்னேன்.

ஆரம்பம்
எழும்பூர் மியூசியம் தியேட்டர் வளாகத்துக்குச் செல்லும் வழியில் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் வண்டியை வழி மாற்றி அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடக்கும் நாள். வேறு வழியில் வளாகத்தை அடைந்தோம்.

மாலை 5.15க்கு, விருந்தினர்களை வரிசையாக அழைத்தனர். 'காக்கைச் சிறகினிலே' பாடலுடன் விழா தொடங்கியது.


போக்குவரத்துச் சிக்கல் காரணமாக இளையராஜா மட்டும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அசோகமித்திரனுக்கு நடுநாயகமான இடம். அவருடைய இரு பக்கங்களிலும் கமல், இளையராஜா. இளையராஜா பக்கம் பிரபஞ்சன், நாஞ்சில்நாடன். கமல் பக்கம் ஜெயமோகன், பி.ஏ.கிருஷணன். 

கூட்டம் நிரம்பி இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த காலியிருக்கைகளும் நிரம்பிக்கொண்டுயிருந்தன. அம்மாவை ஒரு இருக்கையில் அமர வைத்தேன். நாங்கள் தரையில் அமர்ந்து கொண்டோம், விழாமேடைக்கு நேர் எதிர்.

இது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விழா. பிரம்மாண்டமாகவும், இலக்கிய அனுபவம் அளிக்கும்படியாகவும் இருந்தது. நிகழ்ச்சி விஜய் டிவியில் வெளிவருமென்பதால் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கான அரங்கம் இலக்கிய நிகழ்ச்சிகள் என்று பார்க்கையில் பெரியதென்றாலும் கமல், இளையராஜா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு சிறியதே! கணிசமானவர்கள் நின்றுகொண்டுதான் பார்த்தார்கள். 

எதற்காக இந்த விழா?

இந்த கேள்விக்கான தன்னிலை விளக்கமாக ஜெயமோகன் எழுதியதில் வெண்முரசு விழா ஏன்? எனக்கு உடன்பாடு என்பதே இவ்விழாவிற்கு நான் குடும்பத்தோடு செல்லக்காரணம்.
"இம்மாதிரியான பெருமுயற்சிகள், நம் தமிழ்ப்பண்பாட்டுச்சூழலால் உதாசீனப்படுத்தப்பட்டு பாதியிலேயே நின்று விடும். சோர்வும் தனிமையுமே அவற்றை செய்தவர்களுக்கு எஞ்சும். காரணம், நம் வாசகர்களும் சரி, ஊடகங்களும் சரி இயல்பாக இத்தகைய பெரு முயற்சிகளை கவனிப்பவர்கள் அல்ல, ஆதரிப்பவர்களும் அல்ல என்பதே".

வெண்முரசு
ராஜாஜியில் தொடங்கி சோ வரை பலரும் வியாசரை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறார்கள். எழுதியும் வருகிறார்கள். 300 முதல் 3000 பக்கங்கள் இவை இருக்கும்.

நான் சோ எழுதிய மகாபாரதத்தை தவிர வேறு படித்ததில்லை!

தினம் ஓர் அத்தியாயமென தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன், 'வெண்முரசு' என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35,000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார்.

பாகங்கள்
காடு எரியுதுன்னு வைச்சுப்போம். அதுக்கு முதல் பொறின்னு ஒண்ணு இருக்கும் இல்லையா? அது மாதிரி குருக்ஷத்திரப் போரோட முதல் பொறிதான் முதற்கனல். அம்பை முதன்முதலில் சிந்தின கண்ணீர்த் துளிதான் இந்த பாகம்.

மழைக்காக தவளை எப்படி பிரார்த்தனை நடத்துதோ அப்படி குருக்ஷத்திர போரை உள்ளூர விரும்பின, அதுக்காக பிரார்த்தனை செய்த பெண்களைப் பத்தி சொல்கிறது மழைப்பாடல்.

மூன்றாம் பாகமான வண்ணக்கடல், புறக்கணிக்கப்பட்டவர்களைப் பத்தி உரக்கப் பேசுது. ஏகலைவன், துரோணர், கர்ணன்னு பாரதத்துல ஒதுக்கப்பட்ட மாந்தர்கள் நிறைய இருக்காங்க. இவங்க இந்த பாகத்துல சங்கமிச்சிருப்பாங்க.

அடுத்து நீலம். தன்னளவிலேயே தனித்த நாவல். ராதையோட கண் வழியே கிருஷ்ணனோட இளமை பருவத்தை அணுகறது. இதுல ஒரு சுவாரஸ்யம் இருக்கு.

இந்த நான்கையும் தனித்தனி புத்தகமாக 'நற்றினை பதிப்பகம்' வெளியிட்டிருக்கு.

5வது பிரயாகை. இன்னும் புத்தகமாக வெளிவரவில்லை. தொடரா இணையத்தில் வந்துகொண்டிருக்கிறது.

கங்கைல கலக்குற 5 நதிகளை பிரயாகைன்னு சொல்வாங்க. அப்படி பாஞ்சாலி என்கிற திரௌபதியோட பிறப்பை அவங்களோட ஆளுமையை வளர்த்தெடுத்த நிகழ்ச்சிகளை சொல்லுறது இதுல பதிவாகிறது.


பேசும் போது
பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் பேசுகையில், "வியாசர் பறந்த வானில், ஈயாக அல்ல, பருந்தாக ஜெயமோகன் இந்த நாவல் மூலமாக பறந்திருக்கிறார்" என்றார்.

"வெண்முரசின் சொல் நயத்தை மெச்சும் வகையில் அதன் சொற்களை எல்லாம் தொகுத்து ஒர் அகராதி வெளியிட வேண்டும்" என்றார் நாஞ்சில்நாடன்.

அசோகமித்ரன் பேசும் போது, "இன்றைய கணினி தொழில்நுட்பம் இல்லாவிட்டால், இப்படியொரு நாவல் முயற்சி சாத்தியமா என்று தெரியவில்லை. கையால் எழுதுவது என்பது மிகவும் அலுப்பு தருகிற விஷயம். கணினி தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி இந்த நாவலை ஜெயமோகன் எழுதுவது, பெரிய மகத்தான முயற்சி" என்றார்.

நீலம் தொகுப்பை முழுவதும் படித்துவிட்டு வந்திருந்த பிரபஞ்சன், அதிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டி, "இது எந்த பாரதத்திலும் இல்லை. இது போன்ற புது சிந்தனைகள்தான் எழுத்தாளனுக்குத் தேவை. ஜெயமோகனின் இந்த முயற்சி எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அவரால் 3 லட்சம் பக்கங்கள்கூட எழுதமுடியும். 
மகாபாரதத்தை காலத்திற்கேற்ப, புதுமையாக எழுதி வருகிறார். இது உலக பேரிலக்கியமாக மலர வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சிக்கு நடுவில் பல ஆண்டுகளாக, மகாபாரதம் பிரசங்கம் செய்யும் மஹாபாரதக் கலைஞர்கள் ஐவர் விழாமேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

ஓவியர் சண்முகவேல், இணையத்தில் பாரத மொழிபெயர்ப்பைச் செய்துவரும் அருட்செல்வப்பேரரசன், ஜெமோகனின் மனைவி அருண்மொழி அவர்கள் அனைவரும் மேடையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இசையுடனே ஆரம்பித்து பேசத் தொடங்கிய இளையராஜா, "மக்களுக்கு புத்தெழுச்சி கொடுக்காத எந்தக் கலையும் நாட்டில் இருப்பது வீண். அவரின் இந்தப் படைப்புக்கு இசையமைக்க நேர்ந்தால் அவர் எழுதும் வேகத்துக்கு என்னால் இசையமைக்க முடியுமா எனத் தெரியவில்லை. இதனை எழுதுவதன் மூலம், திரைத்துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்து துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார்" என்றார்.

கமல்ஹாசன் பேசும் போது - "பைபிளை மிஞ்சும் அளவுக்கு 3000 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்படும் உலகின் மிகப்பெரிய இலக்கிய படைப்பாக உள்ள மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதும் ஜெயமேகனின் முயற்சி மிகவும் தைரியமானது. கடினமான தமது முயற்சியின் மூலம் ஜெயமோகன் பேராசை மிக்கவராக தெரிகிறார்.


மனிதர்கள் எல்லோரும் கதைகளால் பின்னப்பட்டவர்கள். நீங்கள், நாம் எல்லோருமே கதை கேட்பவர்கள். நமக்கு மதம் தேவையோ, இல்லையோ, அந்த மதங்கள் தருகிற, அந்த மதங்களுக்குள் இருக்கிற கதைகள் நமக்கு தேவை. இசை வடிவத்தில் சொல்வதுதான் வேதங்கள். அதனால் சுருதி என்கிறோம். மகாபாரதத்தை ஜெயமோகன் நாவலாக எழுத, இளையராஜா அதை இசையாக தர, நான் கேட்டு கொண்டே இருப்பேன். வேறெதுவும் தேவையில்லை. இவ்வளவு பிரம்மாண்டமான நாவலை நான் இன்னும் படிக்கவில்லை. நம் காலத்தில் வணங்கத்தக்க படைப்பாளனாக இந்த மகாபாரத நாவல் வரிசை வழியாக ஜெயமோகன் நமக்கு கிடைத்திருக்கிறார்’’ என்றார்.

ஜெயமோகன் தனது ஏற்புரையில், "இந்த நாவல் முயற்சி எனது 25 ஆண்டு கால கனவு" என்றார்.

கவர்ந்த அம்சம்
  • கமல் பேசி முடித்தவுடன் கூட்டம் நகரவில்லை. ஜெயமோகனின் பேச்சை ரசித்துவிட்டுதான் கலைந்தார்கள். Like! 
  • தொழில்நுட்ப வடிவத்துக்கு முதன்மை கொடுத்து உருவாக்குவதால் முன்னெப்போதும் இருந்திராத வகையில் பல லட்சம் வாசகர்களைச் சென்றடையும் - சாத்தியமிருக்கிறது. Technology integration. 
  • அரசோ, பல்கலை கழகமோ, கல்வியமைப்புகளோ இத்தகைய முயற்சிகளுக்கு உதவாத இன்றைய சூழலில், வெண்முரசு நூல்வரிசை மேலும் பரவலாகச் சென்றடைய கமல் செய்யும் இந்த உதவி ஓர் அரசாங்கத்தின் உதவிக்கு நிகரானது. Fame - Popularity.
  • தனிப்பட்ட முறையில் வெண்முரசு நாவலுக்காக வரைந்த ஓவியங்களின் அழகை சிலாகிக்காமல் இருக்கவே முடியாது. Excitement!

உலகின் மிகப் பெரிய நாவலாக வளர்ந்துகொண்டிருக்கும் ‘வெண்முரசை’ நாம் ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும்.


***
என் பேச்சை கேட்டு கூட வந்த அப்பா அம்மா, தீர்ந்ததும் ஒவ்வொரு மிட்டாய் கொடுத்து சத்தம் போடாதே என கெஞ்ச வைத்து பின் தூங்கிப்போன மஹதி, பொறுமையோடு இருந்த ஜெயஸ்ரீக்கும் Thanks. 

மறுபடியும் ஓர் இலக்கிய விழாவிற்கு "வா" என்றால் இவர்கள் என்ன சொல்வார்கள்? கேள்வியை நான் கேட்கப்போவதில்லை.
***

துளிகள்
மனுஷயபுத்திரன் மக்களோடு அமர்ந்திருந்தார், பின் வரிசையில்.
*
பாலகுமாரன் தனது மனைவியோடு வந்திருந்தார் என கேள்விபட்டும் பார்க்க முடியவில்லை.
*

நடுத்தர வயதில் இருந்தார் அந்த பெண்மணி.
"ஏங்க நீலம் ஒன்னு தாங்க, எவ்வளவு?"
"முதற்கணல்தான் 1st பாகம்ங்க".
"மூன்று பாகமும் ஏற்கனவே படித்துவிட்டேன்" - புன்னகை.
ஓ...

புன்னகை.
*

"ஏங்க இந்த புக்குக்கு discount கிடைக்குமா..?"
"அதெல்லாம்...இல்லைங்க."
"மொத்த நாலு பாகமும் எவ்வளவு?"
"செம்பதிப்பா?"
"அப்படின்னா...?"
"செம்பதிப்புனா படமிருக்கும், இதுனா சாதா. Text, எழுத்து மட்டும் தான். படம் கிடையாது"
"செம்பதிப்பு எவ்வளவு?"
"மூவாயிரத்தி......"
***


Additional:
சண்முகவேல் - ஓவியரின் வலைதளம்.
இதுதமிழ் - விழா பிரபலங்கள் முழு பேச்சும்.
தினமணிதமிழ் இந்துமாலைமலர் - விழா குறித்த நாளிதழ் செய்திகள்.
குங்குமம் பேட்டி
வெண்முரசு - இணையத்தில் இலவசமாக படிக்க.
.