Friday, January 14, 2011

34-வது புத்தகக் காட்சி

என் முறை...
*****
'தனிமை தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்கப்பட்டபோது, 'புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்' என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு.

*****

சென்னையில் 34-வது புத்தகக் காட்சி கடந்த 4 ஜனவரி 2011, செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஏறத்தாழ 1.76 லட்சம்(இது வேறு!) சதுர அடியில் 646 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த காட்சி அரங்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குவிக்கப்பட்டுள்ளன.


சனி, ஞாற்றுக்கிழமைகளில் சென்றிருந்தேன். போன முறை வருந்தி அழைத்த நண்பர்கள் இந்த முறை முதல் அழைப்பிலேயே ஆர்வம் காட்டி வந்திருந்தனர். முதல் முறையாக இங்கே வந்த நண்பர்களுக்கும் என் அன்பு.

வரும் வரைதான் தயக்கம். வந்தால் நிச்சயம் அடுத்த முறையும் வருவீர்கள். அடுத்தடுத்த முறையில் என்னதான் இருக்கிறது என்று புத்தகத்தைப் புரட்டினால்..... அங்கே இருக்கிறது 'தூண்டில்'. ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் மாட்டிவிடும்.

சூழல் மாற்றப்பட வேண்டும்

இந்த ஆண்டு மனுஷ்யபுத்திரன் பேசியது, தீவிரமானது.

"தமிழகத்தில் புத்தகம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெறும்போது அங்கு தவிர்க்க முடியாமல் கேட்கும் குரல்; 'புத்தகங்களை வாங்குங்கள், புத்தகங்களை வாசியுங்கள்' என்பதாகும். எனக்குத் தெரிந்து உலகில் வேறு எந்தச் சமூகத்திலும் இப்படியொரு துர்பாக்கியமான சூழல் கிடையாது.

ஒரு படித்த சமூகம் புத்தகத்தைத் தேடுவதும் வாங்குவதும் வாசிப்பதும் மிக இயல்பானவை. ஆனால், இங்கே என்ன நடக்கிறது படித்தவர்கள் மத்தியில் நின்றுகொண்டுதான் 'படியுங்கள், ஏதாவது படியுங்கள்' என்று கண்ணீர் வரும் அளவுக்கு கோருகிறோம்.

மெத்தப் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் 'எனக்குப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது' என்பதைப் பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள்.

அவர்களே பல சமயங்களில் புத்தகங்களை வெளியிடவும் வருகிறார்கள். விசித்திரமான சூழலை மாற்றியே ஆக வேண்டும் நாம்" என்றார் மனுஷ்யபுத்திரன்.

"நிச்சயமாக இந்த சூழல் மாற்றப்பட வேண்டியது. மாற்ற வேண்டும் என்றால் எதாவது படியுங்கள் என்று கோருவதை தவிர்த்துவிட்டு, பேசுபவர்கள் முதலில் ஏதேனும் ஒரு நல்ல புத்தகத்தைப் பற்றி விரிவாகப் பேசிப் பழக வேண்டும். மனுஷ்யபுத்திரனை நான் வழி மொழிகிறேன்" என்றார் தமிழச்சி தங்கபாண்டியன்.

இவர்கள் விரும்புவதை போல மாற்றத்தை தான், நாம் வேறு மாதிரி முயன்று கொண்டிருக்கிறோம்.


குழந்தைகளை....

இங்கு பேசிய வைரமுத்துவின் பேச்சு வசிகரமானது.

"பெற்றோர்கள் குழந்தைகளைப் புத்தகங்கள் இருக்குமிடம் நோக்கி அழைத்துச் செல்லுங்கள். அவர்களைப் புத்தகங்களோடு புழங்கவிடுங்கள். அவர்கள் படிப்பது அப்புறம் இருக்கட்டும்; முதலில் அவர்கள் புத்தகங்களைத் தொட்டுப் பார்க்கட்டும். அந்தத் தொடுதல் - உலகை அவர்களுக்கு சரியான வகையில் அறிமுகப்படுத்தும்" என்றார் வைரமுத்து.

இங்கு பிரச்சனை, சரி வர நாமே பழகவில்லை. நாம் பழக்கவில்லை என்றால் ஒரு தலைமுறையே இதை இழக்கிறது. இதை தான், உணர மறுக்கிறோம்.

*****

இந்த முறை, வாங்கிய விவரம்.

1. திராவிட இயக்க வரலாறு - ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம்(பாகம் 1) ரூ.200

2. திராவிட இயக்க வரலாறு - ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம்(பாகம் 2) ரூ.200

3. முதல் உலகப் போர் - மருதன், கிழக்கு பதிப்பகம். ரூ.160
    (ஆரம்பப் புள்ளி முதல் இறுதிக் கட்டம் வரை)

4. இரண்டாம் உலகப் போர் - மருதன், கிழக்கு பதிப்பகம். ரூ.185
    (ஆரம்பப் புள்ளி முதல் இறுதிக் கட்டம் வரை)

5. புதுமைப்பித்தனின் சம்சார பந்தம் - கமலா புதுமைப்பித்தன், பரிசல் புத்தக நிலையம். ரூ.30

6. எம்.ஜி.ஆர். பேட்டிகள் - தொகுப்பு எஸ்.கிருபாகரன், மனோன்மணி பதிப்பகம். ரூ.130

7. குறுந்தொகை மூலமும் விளக்கமும், முல்லை பதிப்பகம். ரூ.150

8. கலித் தொகை மூலமும் விளக்கமும், முல்லை பதிப்பகம். ரூ.150

9. The history of mathematics கணிதத்தின் கதை - இரா. நடராசன், பாரதி புத்தகாலயம். ரூ.50 (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

10. சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு - கா. அய்யப்பன், மாற்று பதிப்பகம் ரூ.100

பகுதி இரண்டு

1. ஸ்மைல் ப்ளீஸ் - துக்ளக் சத்யா, அல்லயன்ஸ். ரூ.40

2. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன், தமிழினி ரூ.90 (சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல்)

3. தோரணத்து மாவிலைகள் - சுஜாதா, விசா பப்ளிகேஷன்ஸ். ரூ.80

4. சுவை சுவையாய் சமையல் குறிப்புகள் - கோமதி சந்திரசேகரன், ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ். ரூ.75

5. விண்வெளிக்கு ஒரு புற்வழிச்சாலை World Science Fiction, உலக விஞ்ஞானச் சிறுகதைகள். தொகுப்பும் மொழிபெயர்ப்பும் - இரா. நடராசன். பாரதி புத்தகாலயம். ரூ.30

6. உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி - S.R. Vas & Anita S.R. Vas, PUSTAK MAHAL ரூ.88

7. திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டிதழ் (ஜனவரி - டிசம்பர் 2010) - ரூ.160

8. திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டிதழ் (ஜுலை - செப்டம்பர் 2008) - ரூ.30

9. மௌனி படைப்புகள். முழுத் தொகுப்பு -தொகுப்பாசிரியர் சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம். ரூ.200

10. தமிழ் நாட்டுப் பழமொழிகள் (4000) - முல்லை பில். முத்தையா, முல்லை பதிப்பகம். ரூ.70

*****
ரசித்த ட்விட்டர் ganesukumar@twitter.com :

உடம்புக்கு எந்த நோவுன்னாலும் முதலில் நெத்தியில் விபூதி வைத்துவிடும் அப்பத்தாவிடம் நாத்திகம் பேச மனம் வருவதில்லை.

*****