Saturday, April 17, 2010

இரு சம்பவங்கள் - சானியா மிர்ஸா

போனா வாரம் நம்மை கடந்து சென்ற இரு சர்ச்சைகுரிய சம்பவங்கள். முதலாவது சானியா மிர்ஸா திருமணம், இரண்டாவது யூலிப் பாலிசிகளை விற்க 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது செபி விதித்திருந்த தடை. முதலாவது, சொந்த விஷயம் பொது பிரச்சனையானது. இரண்டாவது, பொது பிரச்சனை நமக்கான சொந்த விஷயம்.

சானியா மிர்ஸாவின் புகைப்படத்தை எரித்ததாக மதுரையில் 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. விஸ்வ இந்து பரிஷத் தும் மற்றும் பல இந்து பரிவார அமைப்புகளும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே, தன்னுடைய பத்திரிகையில் சானியாவை தாக்கி கடுமையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். 'ஒரு பாகிஸ்தானியரை திருமணம் செய்துகொள்ளும் சானியா, இனிமேல் எப்படி இந்தியாவுக்காக விளையாடுவார்?' என்ற கேள்விகளை இந்துத்துவ அமைப்புகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

சானியா மிர்ஸா இந்தியாவுக்கு புகழ் தேடித் தந்த ஒரு விளையாட்டு வீராங்கனை. தனது 18 வயதிலேயே விளையாட்டுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாக மதிக்கப்படும் அர்ஜுனா விருதையும், 17 வயதிலேயே சர்வதேச கவனத்தைப் பெற்றார். மிகவும் சோர்ந்து கிடந்த இந்தியாவின் விளையாட்டுத் துறையை அவரது வருகை ஊக்கம் பெற வைத்தது. உலக அளவில் அமெரிக்க மற்றும் ரஷ்யப் பெண்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த சானியா நுழைந்து கலக்கியது நமக்கு பெருமையைத் தந்தது.

சானியாவின் வெற்றி அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, சர்ச்சைகளையும் கொண்டு வந்தது.குட்டைப் பாவாடை அணிந்துகொண்டு விளையாடுவது மத விரோதம் என்று சிலர் கண்டனம் தெரிவிக்க, அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பல இடங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன. வேறு வழியின்றி அவர் வேறுவிதமான உடையை அணிந்தார். அவர் அமர்ந்திருந்தபோது எதிரே இருந்த தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார் என்று அவர்மீது குற்றம் சாட்டினர். அவர் தனது தேசபக்தியை கண்ணீர் மல்கவெளிப்படுத்திய பிறகே... சர்ச்சைகள் கொஞ்சம் நின்றது.

சானியா இந்தியராக மட்டுமே பார்க்கப்பட்டிருந்தால் இவ்வளவு சர்ச்சைகள் எழுந்திருக்காது. அவரை ஒரு பெண்ணாகவும், அதுவும் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த ஒருவராகவும் பார்க்கின்ற காரணத்தினால்தான் இந்தப் பிரச்னைகள் எல்லாம் எழுந்துள்ளன. இந்தியாவில் விளையாட்டுத் துறை வளர்ச்சி அடையாததற்கு இத்தகைய பிற்போக்குத்தனமான பார்வையும் ஒரு காரணம். இந்தியர்கள் தமது தேச பக்தியை வெளிப்படுத்திக்கொள்ள எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது, மத்திய அரசால் கொண்டு வரப்படும் அணுசக்தி நஷ்டஈடு மசோதா இந்திய இறையாண்மைக்கே எதிரான ஒன்றாகும். நமது நாட்டை அமெரிக்க தனியார் நிறுவனங்களின் நலன்களுக்காக அடகு வைக்கிற முயற்சி இது. ஆனால், இந்தியாவின் அரசியல்வாதிகள் அல்லது சங் பரிவாரங்களோ இந்த மசோதாவை எதிர்த்து வீதிகளில் இறங்கிப் போராட முன்வரவில்லை. சானியாவுக்கு எதிராக முஷ்டியை உயர்த்திக்கொண்டு நிற்கும் அரசியல் தலைவர்கள் இந்த மசோதாவைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதற்கு முன்பு அமெரிக்காவோடு அணுஆயுத ஒப்பந்தம் செய்ததைப் பற்றியும் இந்த பரிவாரங்கள் தூங்கிக் கொண்டுதான் இருந்தன. இந்தியாவின் அதிகபட்ச தேசபக்தி தங்களிடம்தான் இருக்கிறது என்று உரிமை கொண்டாடும் இவர்கள், இந்திய இறையாண்மை பாதிக்கப்பட்ட நேரங்களில் எங்கே போயிருந்தார்கள்?

மாலிக்கை திருமணம் செய்துகொண்டால் சானியா பாகிஸ்தானிய பிரஜையாக மாறிவிடுவார் என்று இந்துத்துவவாதிகள் கூறுகின்றனர். ஆனால், திருமணத்துக்குப் பிறகு தாங்கள் துபாய்க்கு குடியேறப்போவதாக மாலிக்கும், சானியாவும் கூறியுள்ளனர்.பாகிஸ்தானியரை மணந்துகொண்ட ஒரு பெண் எப்படி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று தமது குதர்க்கவாதத்தை அவை எழுப்புகின்றன.

இதுவும்கூட புதிய விஷயமல்ல... ஒரு நாட்டில் பிறந்தவர் இன்னொரு நாட்டுக்காக விளையாடுவது என்பது நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகிற ஒன்றுதான். கிரிக்கெட்டிலும், டென்னிஸிலும் அப்படி ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஒருவேளை துபாய்க்குச் சென்று அங்கே அந்த நாட்டின் பிரஜையாக சானியா மாறிவிட்டாலும்கூட அவர் விரும்பினால் நமது அரசும் ஒப்புக்கொண்டால் அவர் இந்தியாவுக்காக விளையாடுவதில் சிக்கல் எதுவும் இருக்கப்போவதில்லை.

எதற்காக இந்தப் பிரச்னை குறித்து இவ்வளவு சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 'இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தேசப்பற்று இல்லாதவர்கள். அவர்கள் பாகிஸ்தானைத்தான் எப்போதும் தமது தாய் நாடாகக் கருதி வருகிறார்கள்' என்று சொல்லவே சில அமைப்புகள் விரும்புகின்றன. அதற்கு ஒரு சிறுவாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் நழுவ விடுவதில்லை.

பெரும் சர்ச்சைக்குப் பின் கடந்த 12-04-2010-ம் தேதி ஷோயப் மாலிக்-சானியா மிர்சா திருமணம் நடைபெற்றது. "எங்களது திருமணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைகளால் எங்களுக்கு எவ்வித பாதிப்பு எற்படவில்லை. திருமணதுக்கு முன் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளையும் மறந்து விட்டேன். பாகிஸ்தானியரை திருமணம் செய்யவில்லை; என் மனதை கவர்ந்தவரை திருமணம் செய்துள்ளேன்." என்று முத்தாய்பாக சொல்லியுள்ளார். அதுதான் சானியா மிர்சா.

நமது வாழ்துக்கள் எப்போதும் உண்டு.

1 comment: